நமது அரசியல் பிரதிநிதிகள் மோடியிடம் பேசியது என்ன?

இராகவன் கருப்பையா-

அண்மையில் மலேசியாவுக்கு குறுகிய கால வருகை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர்.

‘குலோஸ்ட் டோர் மீட்டிங்'(Closed Door Meeting) எனப்படும் அந்த ரகசிய சந்திப்பை யார் ஏற்பாடு செய்தது, எந்த தேதியில் எங்கு அது நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

சிலாங்கூர், கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், சட்டத்துறை துணையமைச்சர் குலசேகரன், பினேங், ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நேத்தாஜி ராயர், இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந் சிங், ஒற்றுமைத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன், மனிதவள அமைச்சர் ரமணன், தலைநகர் பத்து தொகுதி உறுப்பினர் பிரபாகரன், பேராக் சுங்ஙை சிப்புட் தொகுதியின் கேசவன் ஆகியோரோடு, மேலவை உறுப்பினர்கள் லிங்கேஸ்வரன் மற்றும் சரஸ்வதியும் மேலும் சிலரும் அந்த சந்திப்பில் இடம்பெற்றதாகத் தெரிகிறது.

இந்தியத் தரப்பில் மோடியும் வெளியறவு அமைச்சர் ஜெய்ஷங்கரும் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

அந்த சந்திப்பு மலேசிய – இந்திய உறவுகளின் வலிமையை பிரதிபலிப்பதாக கோபிந் சிங் தனது முகநூலில் மிசச் சுருக்கமாக பதிவேற்றம் செய்திருந்தார்.

மலேசிய – இந்திய உறவுகள் மேம்படுவதில் பெருமைக் கொண்டாடும் நம் தலைவர்கள், இந்தியாவிலிருந்து இங்கு வந்து ஒலிந்து கொண்டிருக்கும் சமயத் தீவிரவாதி ஸாக்கிர் நாய்க்கைப் பற்றி மோடியிடம் பேசவில்லை என்றே தெரிகிறது.

“ஸாக்கிர் நாய்க்கை ஏன் இங்கிருந்து மீட்டுக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்,” எனும் கேள்வியை யாருமே மோடியிடம் முன் வைத்ததாகத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு முன்னெடுப்பை இவர்கள்தான் மேற்கொள்ள வேண்டுமேத் தவிர மலாய்க்கார அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள். பொது மக்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை.

ஆக, ஸாக்கிர் நாய்க் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்வதற்கும் அந்நபர் மீதான நமது ஆதங்கத்தை வெளிப்படுத்துவற்கும் கிடைத்த மற்றொரு வாய்ப்பை நம் பிரதிநிதிகள் தவறவிட்டுள்ளதாகவே தெரிகிறது.

ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த இதே போன்றதொரு வாய்ப்பையும் நம் தலைவர்கள் நழுவ விட்டனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெய்ஷங்கர் மலேசியா வந்திருந்த போது இங்குள்ள இந்தியத் தூதரகம் குறிப்பிட்ட சிலருக்கு சிறப்பு அழைப்பு விடுத்து 2 மணி நேர சந்திப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அவர்களில் குலசேகரன், பினேங் மாநில முன்னாள் துணை முதல்வர் ராமசாமி மற்றும் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டியும் அடங்குவர்.

இம்மூவர் உள்பட அங்கிருந்த யாருமே, “ஏன் ஸாக்கிர் நாய்க்கை இங்கிருந்து உங்கள் நாட்டுக்கு மீட்டுக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்,” என்று ஜெய்ஷங்கரிடம் கேட்கவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று.

கடந்த வாரமும் இதே போன்ற நிலைதான் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. ஸாக்கிரைப் பற்றி யாரும் ஒன்றும் பேசவில்லை என்றுதான் தெரிகிறது.

ஆக, இதுபோன்ற அருமையான வாய்ப்புகளை எல்லாம் நழுவ விடும் நம் தலைவர்கள் எதிர்வரும் காலங்களில் அந்த மத போதகரினால் நம் சமயத்திற்கு களங்கம் ஏற்பட்டால் அது குறித்து கருத்துரைப்பதற்கு அருகதை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி கருத்துக் கூறினாலும் அதில் அர்த்தமில்லை.

அப்படி ஏதாவது பேசினால் அது வெறும் அரசியல் ‘டிராமா’ என்றுதான் வெகுசன மக்கள் அடையாளப்படுத்துவார்கள்.

மோடி கோலாலம்பூரில் இருந்த போது, ஸம்ரி எனப்படும் வினோத் காளிமுத்து தனது கும்பலுடன் சேர்ந்து, பதிவு செய்யப்படாத இந்து கோயில்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்தது நாம் எல்லாரும் அறிந்ததே.

அதற்கும் ஸாக்கிருக்கும் சம்பந்தம் இருக்கக் கூடும் என மூத்த ஊடகவியலாளர் கதிரேசன் ‘எஃப்.எம்.டி.’ எனப்படும் இணைய ஊடகத்தில் பதிவிட்டிருந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை நாம் இங்கு நினைவுக்கூரத்தான் வேண்டும்.

“ஸாக்கிர் நாடு கடத்தப்பட்டால் என்னுடைய அடையாள அட்டையை சரண் செய்ய நான் தயங்கமாட்டேன்,” என கடந்த 2019ஆம் ஆண்டில் ஸ்ம்ரி காளிமுத்து குறிப்பிட்டிருந்ததை கதிரேசன் அக்கட்டுரையில் சுட்டிக் காட்டினார்.