இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! (UPDATED)

ஐநா. மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 உறுப்பு நாடுகளின் ஆதரவோடு வெற்றிபெற்றுள்ளது. (காணொளி : 05.43)

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் இன்று மனித உரிமை ஆணையத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அத்தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24 நாடுகள் வாக்களித்தன.

சீனா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் அத்தீர்மானத்தை எதிர்த்தன. மலேசியா உட்பட 8 நாடுகள் இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இவ்வாக்களிப்பின் முடிவில் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும், அங்கு நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

(2-ம் இணைப்பு)

யார் எதற்கு வாக்களித்தனர்?

மனித உரிமைகள் ஆணையத்தில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தும், எதிராக வாக்களித்தும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலும் என அந்நாடுகள் பிரிந்திருந்தன.

ஆனால், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தியா மட்டுமே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் வாக்களித்திருக்கிறது. சீனா, வங்கதேசம் உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகள் இலங்கையை ஆதரித்திருக்கின்றன.

லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை கியூபாவும் ஈக்குவடோரும் தீர்மானத்தை எதிர்க்க மற்ற நாடுகள் எல்லாமே தீர்மானத்திற்கு ஆதரவாகத்தான் நின்றுள்ளன.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை ரஷ்யா மட்டும்தான் இலங்கைக்கு ஆதரவளித்திருக்கிறது. மற்றபடி, மேற்கு ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே போர்க்காலச் சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தெரிவித்திருக்கின்றன.

பொதுவாக முஸ்லிம் நாடுகள் என்று எடுத்துக்கொண்டால், அண்மையில் கடாபிக்குப் பின்னர் ஆட்சி மாறிய லிபியாவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாமே, ஒன்றில் அமெரிக்கப் தீர்மானத்தை எதிர்த்திருக்கின்றன, அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிகொண்டிருக்கின்றன.

இவற்றில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கின்ற சவூதி,கட்டார் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பதுடன் இறுதிக்கட்டத்தில் முஸ்லிம் நாடுகளைக் குறிவைத்து இலங்கை தனது பிரச்சாரங்களை முன்னெடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பின்னணி

இலங்கையின் இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஐ.நா நிபுணர்குழு அவற்றை ஆராயும் விதத்தில் அறிக்கை சமர்பித்திருந்தது. அதற்கு இலங்கைத் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது.

அதன் பின்னர் இலங்கை அரசு தானாகவே அமைத்துக்கொண்ட கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவும் பல விடயங்களை ஆராய்ந்து தனது அறிக்கையை சமர்பித்திருந்தது.

இந்த நிலையிலேயே, இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கையிடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அமெரிக்கா, அந்த பரிந்துரைகளை நடைமுறைத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் ஆணையத்தின் ஊடாக முன்வைத்திருக்கிறது.

தீர்மானம் கூறுவது என்ன?

இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அந்த சம்பவங்களுக்கான பொறுப்பேற்கும் தன்மையும் உறுதிசெய்யப்பட வேண்டும் என அமெரிக்கா தனது தீர்மானத்தில் சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கையில் நீண்டகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்கு இருந்த கால அவகாசத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது அமெரிக்காவின் வாதம். இதற்காக கடந்த காலங்களில் இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா பல முயற்சிகளை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டுகின்றது.

ஆனால், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முறையான அமுலாக்கத் திட்டம் இலங்கை அரசிடம் இல்லை என்ற அடிப்படையிலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்காத போர்க்காலச் சம்பவங்களுக்கான போறுப்பேற்கும் தன்மை குறித்த விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலுமே, தாங்கள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டுவந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதேநேரம், நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஆணையரின் பணிமனையுடன் இணைந்து பணியாற்றும்படியும் இந்தத் தீர்மானம் மூலம் அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது.

சமத்துவம், சுயமரியாதை, நீதியை வழங்கக்கூடிய நிலையான அமைதியை இலங்கையில் ஏற்படுத்த இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம் என்றும் அமெரிக்க பிரதிநிதி ஜெனீவாவில் சுட்டிக்காட்டினார்.

TAGS: