மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்!

கேரள மாநிலம் காயங்குளம் பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை உரிமையாளர் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டார்.

அங்குள்ள தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மூலம் சமரசம் பேசியும், குறிப்பிட்ட நேரத்தில் கமலேஷின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார்.

இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த மாப்பிள்ளை கமலேஷ், குறிப்பிட்ட நேரத்தில் ஊருக்கு வர முடியவில்லை. என்றாலும், சுபமுகூர்த்த நேரத்தை தவறவிட விரும்பாத இரு வீட்டாரும் துணிச்சலான முடிவை எடுத்தனர்.

அதன்படி, கமலேஷின் சகோதரி தகவிதா மணமகன் சார்பில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார். திருமண விருந்து முடிந்ததும், புதுப்பெண் சாரி கிரிஷா, மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.