அடையாளம் தெரியாமல் வேறுபெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளையால் பரபரப்பு

தமிழகத்தின் சிவகங்கை கோயிலில் நடைபெற்ற திருமணத்தின்போது தனது மணப்பெண் யார் என்று அடையாளம் தெரியாமல் வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிளையால் மோதல் ஏற்பட்டது.

சிவகங்கை சிவன்கோயிலில் நேற்று 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஒவ்வொரு ஜோடிக்கும் பற்றுச்சீட்டு கொடுத்து  முறைப்படி பதிவுசெய்யப்பட்டு திருமணம் நடைபெற்றது.

அப்போது இரு ஜோடி மணமக்கள் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது தனது மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவதற்கு பதிலாக கூட்டத்தில் அடையாளம் தெரியாமல் வேறொரு மணமகளுக்கு மாப்பிள்ளை ஒருவர் தாலி கட்டிவிட்டார்.

இதனால் அடிதடி ஏற்படும் சூழல் உருவானது. அப்போது தாலி கட்டப்பட்ட மணப்பெண் எழுந்து, தெரிந்தோ தெரியாமலோ எனது கழுத்தில் தாலி கட்டி விட்டார். இவருடனேயே வாழ்ந்து விடுகிறேன், எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் நான்கு குடும்பத்தினரும் அமைதியடைந்தனர். அதன் ஜோடி மாறிப் போன பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் திருமணம் செய்து வைத்து அழைத்துச் சென்றனர்.