மனைவி மீதுள்ள பாசத்தால் பாஸ்போர்ட்டை கிழித்த கணவர்!

husband wife loveஇத்தாலி செல்வதற்காக, விமானத்தில் அமர்ந்திருந்த நபர், மனைவியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால், பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தார்.

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது குஜராத் மாவட்டம். இந்த பகுதியை சேர்ந்தவர் பைசல் அலி; வேலை நிமித்தமாக, இத்தாலிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக, நேற்று முன்தினம், லாகூர் விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

விமானம் புறப்படுவதற்கு முன், இவர் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கணவன் வெளிநாடு செல்வதை விரும்பாத மனைவி, தொலைபேசியிலேயே கதறி அழுதார்.

இதனால், மனம் உருகிய பைசல் அலி, விமானத்திலேயே, தன் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்தார். இது குறித்து, விமான ஊழியர்கள் விசாரித்த போது, “நான் வெளிநாடு செல்வதை மனைவி விரும்பவில்லை. அவள் அழுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, இத்தாலி செல்லும் முடிவை கைவிட்டு, பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தேன்” என்றார்.

விமான நிலையத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேறிய, பைசல் அலியை அனுமதிக்க, விமான நிலைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதன் பின், அவர், தான் கிழித்தெறிந்த பாஸ்போர்ட்டை எடுத்து வந்து அதிகாரிகளிடம் காட்டினார். இதையடுத்து அவரை, அதிகாரிகள், வெளியே செல்ல அனுமதித்தனர்.