சோதனை மேல் சோதனை! நொந்து புலம்பிய சேரன்!

Director seranஇயக்குனர் சேரன் இயக்கத்தில் பத்து ஆண்டுகள் கழித்து வெளிவரும் திரைப்படம் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை. எதிர்பாராத தோல்விகளால்(சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தாலும்) சில ஆண்டுகள் அமைதியாக இருந்து ஒரு பலமான கதையை உருவாக்கிக்கொண்டிருந்த சேரன் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தின் மூலமாக ஒரு இயக்குனராக திரையுலகத்திற்குள் மறுபடியும் பிரவேசிக்கிறார்.

இத்திரைப்படத்தில் நாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யா மேனன், காமெடியனாக சந்தானம் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சேரன் “இன்றைய சூழ்நிலையில் மக்கள் ஆயிரம் பிரச்சனைகளை தலைக்குள் திணித்துக்கொண்டு எப்போதும் மனதில் ஒருவித அழுத்தத்துடன் இருக்கிறார்கள். ரசிகர்கள் பிரச்சனையை மறந்து சில மணிநேரங்கள் ரிலாக்ஸாக இருக்கவைக்கவே படம் எடுக்கிறோம்.

அப்படி அவர்களுக்கு ஏற்றதுபோல் படம் எடுக்கும் போது அதில் ஒரு  நல்ல விஷயத்தையும் சேர்த்து கொடுக்கிறோம். அந்த நல்ல விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்லவே நான் முயற்சி செய்திருக்கிறேன். நாம் வெற்றிபெறும் போது பலர் நம்மை சூழ்ந்துகொள்வதும், நமது வெற்றி தாமதமாகும் போது நம்மை தள்ளிவைப்பதும் தான் இயல்பு.

ஆட்டோகிராப் படத்தில் நடிக்குமாறு பலரை அணுகினேன். அவர்கள் மறுத்ததால் கோபத்தில் நானே நடித்துவிட்டேன். அதைத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தேன். என்னதான் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற அரிப்பு இருந்தது. அதனால் தான் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை இயக்குகிறேன்.

நான் பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பு தான் இந்த படம். தற்போதைய இளைஞர்களுக்கு தேவையான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும். காமெடிக்கு சந்தானம் உள்ளார். இந்த படத்தை துவங்கும்போது பல நடிகர்கள் பிசியாக இருந்தனர். இன்னும் சில நடிகர்களுக்கு இந்த படத்தில் நடிக்க இஷ்டம் இல்லை. அதனால் கதையை கேட்காமலேயே நிராகரித்துவிட்டனர். ஆட்டோகிராப் படத்தை ஆரம்பித்தபோது வந்த போன்று கோபம் வந்தது.

இந்நிலையில் சர்வானந்த் கதைக்கு பொறுத்தமாக இருந்ததால் அவரிடம் கதை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். நித்யா மேனனும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். நாயகியை நாயகன் தவறாக பார்க்காத கதை. படத்தை முடித்துவிட்டோம். என் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இது மாடர்னாக இருக்கும் என்றார்.

 

TAGS: