சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன் : கருணாநிதி ஆவேசம்

india07713cதிருவாரூர்: “”சேது சமுத்திரத் திட்டத்துக்காக, என்னையும் அழித்துக் கொள்ள தயாராக இருக்கின்றேன்,” என, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசமாக பேசினார்.

திருவாரூர் தெற்கு வீதியில், கருணாநிதியின், 90வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் லோக்சபா தேர்தல் நிதியளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் கலைவாணன் தலைமை வகித்தார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றினால், தூத்துக்குடி துவங்கி வேதாரண்யம், கடலூர் துறைமுகம் வரை, விரிவடைந்து, நம்முடைய வணிகம் முழுவதும் பரவிடும். உலக தொடர்பு தமிழகத்துக்கு இன்னும் அதிகமாக கிடக்கும். அந்நிய செலவாணி மேலும் அதிகரிக்கும்.இலங்கையைச் சுற்றிக் கொண்டு நடக்கும் கடற்பயணம், செல்கின்ற கப்பல்கள், சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால், அவ்வளவு தொலைவு செல்லாமல், தூரமும், செலவும் குறைவாகும்.சேது சமுத்திர கால்வாய் திட்டம் வந்தே தீர வேண்டும் என்பது அண்ணாதுரை கனவு, ஈ.வே.ரா., கனவு, என் அருமை நண்பர், ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆர்., கண்ட கனவு. இவர்கள் கனவு குறித்து சட்டசபையில் விளக்கமாக பேசியிருக்கிறேன்அண்ணாதுரை எடுத்துக்கூறி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது. அ.தி.மு.க., எனப்படும் ஜெயலலிதாவின் கட்சியும் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் வெளியிடப்பட்டது.

தற்போது அதை அவர்களே மறந்துவிட்டு, சேது சமுத்திர திட்டம் நிறைவேறக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடை கோருகின்றனர். தமிழர்களுக்காக வாழும், தி.மு.க.,வினை அறவே தோற்கடிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறி இருக்கும்.எனக்காக, கொட்டும் மழையிலும் கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான சொந்த தம்பிகள், தாய், தந்தையருக்கு, நான் மண்ணின் மைந்தராக அல்ல. மரத்தின் கிளையாக மட்டும் அல்ல. தனி மரமாக இல்லை. மரத்தின் வேராக இருந்து, சேது திட்டத்துக்காக என்னையும் நான் அழித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போர் முழக்கம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

TAGS: