‘பிரதமர்’ கனவு எனக்கு இல்லை

narendra_modiபிரதமராகும் கனவு எனக்கு இல்லை. வருகிற 2017 வரை குஜராத் முதல்வராகவே நீடிக்க நான் விரும்புகிறேன் என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

வரும் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், அவர் இவ்விதம் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அவருடைய இந்தக் கருத்து அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதில் பாஜக தாமதித்து வருவதால், மோடி இவ்வாறு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இப்போதே அறிவித்தால்தான், வருகிற மக்களவைத் தேர்தலில் தங்களது கட்சி மகத்தான வெற்றி பெற முடியும் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான அருண் ஜேட்லி வெளிப்படையாகக் கருத்து தெரிவித்து வருகிறார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாவிட்டால் நமது விக்கெட்டை நாமே வீழ்த்துவது போலாகும் என்றும் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஜேட்லியின் இந்தக் கருத்துக்கு எல்.கே. அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் பாஜக தலைமை காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம், காந்திநகரில் வியாழக்கிழமை ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களைக் கெüரவித்து முதல்வர் நரேந்திர மோடி மேலும் பேசியது:

அரசியல் களத்தில் திறந்த மனதுடன் நான் சில கருத்துகளை பதிவு செய்கிறேன். இதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. நான் பிரதமர் நாற்காலியைக் குறிவைத்துதான் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் கூறுகின்றனர்.

நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதாக அவர்களாவே நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அப்படியொருக் கனவை நான் இந்த நிமிஷம் வரை கண்டதில்லை. எதிர்காலத்திலும் காணப் போவதில்லை.

குஜராத் மக்கள் தங்களுக்கு சேவை புரியவே என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2017 வரை முதல்வராக அவர்களுக்கு சேவை புரிய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். இதை மகிழ்ச்சியாக ஏற்று, 2017 வரை முதல்வராக நீடிக்கவே விரும்புகிறேன். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில்…: நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு விருதுடன் குறைந்த தொகையே அளிக்கப்படுகிறது. இப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாய் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.

இதனால், நல்லாசிரியர்களுக்கு வழங்கப்படும் சொற்பத் தொகையை வைத்து அவர்களால் எதுவும் செய்ய இயலாது. இதனால், அவர்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரித்து அளிக்க விரும்புகிறேன் என்றார் நரேந்திர மோடி.

இந்த நிகழ்ச்சியில் அந்த மாநில ஆளுநர் கமலா பெனிவல் கலந்து கொண்டார். குஜராத் அரசு அனுப்பிய லோக் ஆயுக்த மசோதாவுக்கு கமலா பெனிவல் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

இதனால், முதல்வர் நரேந்திர மோடி அதிருப்தி அடைந்தார். ஆளுநர் கமலா பெனிவல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வந்தார்.

இந்த நிலையில், ஆசிரியர் தின விழாவில் கமலா பெனிவலுடன் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

TAGS: