தமிழர்களை வாழவைக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் இலங்கை செல்கிறார்!

manmohan-singh01இலங்கையில் தமிழர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர்களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கச்சதீவில் இந்தியா – இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கச்சதீவை இந்தியா கேட்டுப் பெறும் பட்சத்தில் இந்தியாவின் அனுபவத்தில் உள்ள இலங்கையின் ஆழ்கடல் பகுதியை இந்தியா இழக்க நேரிடும்.

இலங்கையில் தமிழர்கள் கஷ்டப்படவில்லை. நன்றாகவே வாழ்கிறார்கள். அவர்களை மேலும் வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர்களின் வாழ்நிலை நன்றாக இருக்கும்.

வெளிநாட்டவர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் மாநில அரசு அதற்கான நிலம் கையகப்படுத்தி கொடுக்க முன்வரவில்லை. தமிழக அரசு நிலம் கொடுத்தால் 2023 ஆம் ஆண்டில் தொழில் புரட்சி ஏற்படும்.

அதே போல அதிக நிலம் வைத்துள்ளவர்கள் குழுவாக இணைந்து தொழில் தொடங்க முன்வந்தால் மத்திய அரசு 75 சதவீதம் பங்கு தொகை கொடுக்க தயாராக உள்ளது. மேலும் உள்ள 25 சதவீதம் மட்டும் குழுக்கள் முதலீடு போட்டால் போதுமானதாக இருக்கும் என்றார்.

தமிழக மீனவர்கள் மீது கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட பத்திரிகையாளர்கள், கடந்த ஆண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.தொடர் தாக்குதல்கள் நடக்கிறதே என்றனர்.

அதற்கு பதிலளிக்கையில்,

கடந்த 4 ஆண்டுகளில் அந்த மாதிரி சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் எப்.ஐ.ஆர் (காவல் நிலையத்தில் பதியப்படும்) தகவல் அறிக்கையை காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும்.. இலங்கை சீனா உறவால் இந்தியா பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தான் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டது.

அதே போல பாகிஸ்தான் கேட்டாலும் யோசிப்போம் என்றும் தெரிவித்துள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.

TAGS: