இராகவன் கருப்பையா – கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் சிலாங்கூர், கிளேங் பகுதியில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மூர்க்கத்தனமாக மோதப்பட்ட காட்சிகள் சமூக வலைத் தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த மோட்டார் சைக்கிளோட்டி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்த வேளையில், காரோட்டியும் அங்கேயே கைது செய்யப்பட்டார்.
காரை செலுத்திய இளைஞர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகவும் மது போதையில் இருந்ததாகவும் காவல்துறை பிறகு அறிவித்தது.
எது எப்படியோ அவர் புரிந்த குற்றத்திற்கு ஏற்றவாறு உரிய தண்டனை அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் கடுகளவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் அந்த விபத்து காணொளியில் பதிவாகி, இலட்சக்கணக்கானோர் அதனைப் பார்த்து பலவாராக கருத்துத் தெரிவித்திருந்ததால்தான் குற்றச்சாட்டு கடுமையாக்கப்பட்டுள்ளதைப் போல் தெரிகிறது.
அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பது நமக்கு பெரும் வியப்பாகத்தான் உள்ளது. நாடு தழுவிய நிலையில் உள்ள பல வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் கூட இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொலை குற்றம் என்பதை நிருபிக்க குற்றவாளி கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும். நோக்கமற்ற நிலையில் ஏற்படும் மரணங்களுக்கு தண்டனைகள் வேறுபடும்.
சட்டத்துறைத் தலைவர் வழங்கியுள்ள விளக்கமும் கூட நமக்கு ஏற்புடையதாக இல்லை. ‘சட்டத்தை வசதிக்கு ஏற்றவாறு இப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாமோ,’ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
“அந்த விபத்து கொடூரமானது. காணொளி பதிவு அதற்குச் சான்றாகும். சாட்சிகளும் உள்ளன. எல்லா விபத்துகளையும் நாம் தனித்தனியாகத்தான் ஆராய வேண்டும்,” என்று அவர் அளித்த விளக்கம் நாம் எதிர்பாராத ஒன்றுதான்.
அச்சம்பவம் காணொளியில் பதிவாகாமல் இருந்திருந்தால் மிகக் குறைவானவர்களுக்கு மட்டுமே அதுபற்றி தெரிந்திருக்கும். ஏனெனில் அது போன்ற விபத்துகள் தினந்தோறும் ஆங்காங்கே அதிக அளவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அத்தகைய அசம்பாவிதங்களுக்குக் காரணமாயிருப்பவர்கள் பல வேளைகளில் போதைப் பொருள் உட்கொண்டு அல்லது மதுபானம் அருந்திவிட்டுதான் வாகனங்களை செலுத்தியிருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் மீதான குற்றப் பதிவுகள் சீராகவே இருக்கின்றன. ஏனென்றால் அந்த விபத்துகள் காணொளியில் பதிவாகவும் இல்லை, அதிகமானோர் அச்சம்பவங்களை பார்க்கவுமில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திரெங்கானுவிற்கு அருகில் பெர்ஹெந்தியான் தீவுக்கு அப்பால் இரவு 10.30 மணி வாக்கில் ஒரு படகு கவிழ்ந்ததில் 3 வயதிலிருந்து 40 வயது வரையிலான 3 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்தப் படகை செலுத்திய 22 வயது இளைஞர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது பிறகு தெரியவந்தது. அவர் மீது ஏற்கெனவே போதைப் பொருள் தொடர்பான 5 குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் ‘ஆபத்தான போதைப் பொருள்,’ எனும் சட்டவிதியொன்றின் கீழ்தான் அப்போது அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இரவு நேரத்தில் 3 அப்பாவிகளின் உயிர்களை பலி கொண்ட அவ்விபத்தும் கூட கொடூரமானதுதானே! காணொளி பதிவு இல்லாத காரணத்தால் அது கொடூரம் இல்லை என்று வகைப்படுத்த முடியுமா?
சில தினங்களுக்கு முன் ஜொகூர், செகாமாட் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றின் நிலையும் இதே போல்தான் உள்ளது.
மூன்று பேர்கள் மரணமடைந்த அந்த விபத்துக்குக் காரணமாக இருந்த இளைஞர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்விபத்து காணொளியில் பதிவாகி அதிகமாக பகிரப்படவில்லை என்பதாலா?
இந்த விபத்தும் திரெங்கானு அசம்பாவிதமும் வெறும் ‘பனிப்பாறையின் முனைபோல்’தான். ஏனெனில் காணெளியில் பதிவாகாத எண்ணற்ற விபத்துகளுக்குக் காரணமானவர்கள் மதுபானம் அல்லது போதைப் பொருள் உட்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.























