அதிகாரத்தை ஈழத்தமிழர்கள் கைப்பற்ற வேண்டும்! மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பேட்டி!

sudarsananavchiஈழப்பிரச்சினைகளில் ஆழமான அறிவும் விரிவான பார்வையும் கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். சமீபத்தில்,சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், இலங்கை என்பது தமிழர்களின் பூமி. தமிழீழ கனவு அனைவரின் விருப்பம் என்று பகிர்ந்திருக்கிறார்.

சோனியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவரான நாச்சியப்பனிடமிருந்தே தமிழீழம் குறித்த கருத்து வெளிப்பட்டிருப்பது தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் ஈழ ஆதரவாளர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. அதேசமயம், நாச்சியப்பனின் கருத்தை அறிந்து டெல்லியும் அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், சுதர்ச்சன நாச்சியப்பனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.

கேள்வி – காங்கிரஸும் மத்திய அரசும் தமிழீழத்திற்கு எதிரானதாக இருக்கும் நிலையில், தமிழீழம் அனைவரின் விருப்பம் என்று நீங்கள் சொல்லியிருப்பதன் பின்னணி என்ன?

பதில்- ஈழம் என்ற சொல் வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் அது தமிழர்களுக்குச் சொந்தமானது என்பது புரியும். சங்ககால தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ஈழம் குறித்த பல தகவல்கள் உண்டு. ஈழம் என்பது வடக்கு- கிழக்கை மட்டும் குறிப்பதல்ல. அது, இலங்கை முழுவதையும் குறிப்பது. அந்த வகையில், தமிழர்களின் பூர்வீக பூமி இலங்கை. தமிழினத்தின் இதயமும் அது தான். இலங்கை முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால், வடக்கு-கிழக்கு என்று சுருக்கிப் பார்ப்பதே தவறு. என்னைப் பொறுத்தவரை, இலங்கையின் குடியரசு தலைவராக ஒரு தமிழர் வரவேண்டும். நிச்சயம் ஒரு நாள் அந்த கனவு நிறைவேறும்.

இலங்கை தமிழர்களின் அரசியல் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளுக்காக இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டம்தான், தற்போது வடக்கில் நடக்கவிருக்கும் தேர்தல். இதனை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில், இந்த தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளே எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக, கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு தமிழர்கள் ஒற்றுமையாக உழைப்பது அவசியமாகிறது.

உலகத்தில் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்பி தங்களின் வலிமையை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் பூமி தமிழர்களுக்கு கிடைக்கும். அதிகாரங்களைப் பெற்று பூமியை கைப்பற்ற நினைக்காமல் போர் தொடுக்க வேண்டும் என்பதோ, எதிரி நாடு என்று சித்தரிப்பதோ தவறானது. நடக்கவிருக்கும் தேர்தல் மூலம் முதல் கட்டமாக அதிகாரங்களை தமிழர்கள் கைப்பற்ற வேண்டும் என்கிற பொருள்பட பேசினேனே தவிர….தமிழீழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

கேள்வி – இலங்கையை பிரிப்பது இந்தியாவுக்கு உடன்பாடானதல்ல. நாச்சியப்பனின் கருத்து ஏற் புடையதல்ல என்கிறாரே அமைச்சர் நாராயணசாமி?

பதில் – நாராயணசாமியின் கருத்து சரியானது தான்.அது தான் என்னுடைய கருத்தும். ஏனெனில் இலங்கையை பிளவுபடுத்த வேண்டும் என்று நான் எங்கும் எப்போதும் சொல்லவில்லை. அரசியல் அதிகாரங்கள் மூலம் இலங்கையையே தமிழர்கள் ஆள வேண்டும் என்பதுதான் என் கருத்து. இதற்கு, இலங்கையை பிளவுபடுத்தியோ அதன் மீது யுத்தம் நடத்தியோ இதனை கைப்பற்ற வேண்டும் என்பது பொருள் அல்ல. அப்படி சில பத்திரிகையாளர்கள் குழம்பிப்போய் அர்த்தப்படுத்திக்கொண்டதால் சர்ச்சைகள் உருவாகி விட்டது. நாராயணசாமியின் பேட்டியை பார்த்ததும் அவரைத் தொடர்புகொண்டு நான் பேசினேன். என் கருத்து அப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் அவரிடம் விவரித்தேன்.

கேள்வி – இலங்கைக்கு இந்தியா வழங்கும் போர்க்கப்பல்களால் தமிழர்களுக்கு ஆபத்து என்றும் அதனை வழங்கக்கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்களே?

பதில் – இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கும் ஒப்பந்தம் அண்மையில் போடப்பட்டதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன்படி வழங்கவிருக்கிறது இந்தியா. நாம் கொடுக்காவிட்டால் நமது எதிரி நாடான சீனா கொடுக்க தயாராக இருக்கிறது. நாம், போர்க் கப்பல்களை கொடுப்பதால் அது தமிழர்களுக்கு எதிராக எப்படி பயன்படுத்தப்படும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழக மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்றெல்லாம் சொல்வது பத்தாம்பசலித்தனமாக இருக்கிறது. இலங்கையுடன் நாம் மோதல் போக்கை கையாண்டால் அங்குள்ள தமிழர்களுக்காக இந்தியா மேற்கொண்டு வரும் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பாதிக்கும்.இதைத்தான் தமிழக அரசியல் கட்சிகள் விரும்புகிறதா?

கேள்வி – ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின்படி உருவான 13-வது சட்டத்திருத்தத்தையே அமல்படுத்தாமல் தமிழின விரோத போக்கை கையாளும் இலங்கையை நட்பு நாடு என்று இந்தியா சொல்லி வருவது ஆரோக்கியமானதாக இல்லையே?

பதில் – தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவேண்டும், வடக்கு-கிழக்கு பகுதிகளை தமிழர்களின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும், 37 அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.

இந்த 37 அதிகாரங்களை தமிழர் பகுதிக்கு மட்டுமல்லாது வேறு 9 மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என சொல்கிறது ஷரத்து. இதனை இலங்கை அரசும் அந்த நாட்டின் உச்சநீதிமன்றமும் ஏற்க மறுத்துள்ளதால் ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிக்கல். இருப்பினும், இதனை அமுல்படுத்த வேண்டி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது இந்தியா.

கேள்வி – இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், இது பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார் பிரதமர். தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காத போக்கு காங்கிரஸிடம் அதிகரித்திருப்பதாக குற்றசசாட்டுகள் எழுகிறதே?

பதில் – கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்பது இலங்கைத் தமிழர்களின் விருப்பம். பிரதமர் கலந்து கொண்டால்தான் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று இலங்கைத் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அதனை தமிழகத் தலைவர்களோ புரிந்து கொள்வதே இல்லை. இருப்பினும் கொமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

TAGS: