மக்களவைத் தேர்தல்: பாமக தலைமையில் புதிய அணி

pmkமக்களவைத் தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணியை அறிவித்தார் அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலையும் அவர் திங்கள்கிழமை வெளியிட்டார்.

சென்னையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் ராமதாஸ் கூறியதாவது:

தொகுதியும் வேட்பாளரும்: கிருஷ்ணகிரி – பாமக தலைவர் ஜி.கே.மணி, அரக்கோணம் – முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு, ஆரணி – முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சேலம் – இரா.அருள், புதுச்சேரி – மாநிலச் செயலாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

சமூக அமைப்புகள் பலவற்றுடன் இணைந்து சமூக ஜனநாயகக் கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தொடர்பான விவரங்கள் ரகசியம். அவை குறித்து பிறகு அறிவிக்கப்படும்.

ஆனால் காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் இப்போதும் உறுதியாக உள்ளோம்.

இந்தக் கட்சிகள் அல்லாத மாற்று அணியை அமைப்போம் என்று ஓராண்டுக்கு முன்பு முடிவு எடுத்தோம். அதையே இப்போது செயல்படுத்தியுள்ளோம்.

எங்கள் அணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடும்.

மக்களவைத் தேர்தலில் அன்புமணி நிச்சயம் போட்டியிடுவார். எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது பிறகு தெரிவிக்கப்படும். திராவிடக் கட்சிகள் 46 ஆண்டுகளாக தமிழகத்தைச் சீரழித்து வருகின்றன.

தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோய் விட்டன.

இவற்றையெல்லாம் பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்துக் கூறுவோம். திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு எங்களுக்கு மகிழ்ச்சியும், மற்றவர்களுக்கு அதிர்ச்சியும் கிடைக்கும். எங்கள் அணி அமோக வெற்றி பெறும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு பொதுக்குழுவைக் கூட்டி, எந்தக் கட்சியை ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவிப்போம்.

ஏற்காட்டில் போட்டியில்லை: ஏற்காடு இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப் போவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவும் தெரிவிக்கப் போவதில்லை. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றார் ராமதாஸ்.

TAGS: