முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு! ஜெயலலிதாவின் செயலுக்கு உலகத் தமிழர்கள் காறித்துப்புவார்கள்! வைகோ ஆவேசம்!

vaikoமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது என்று கடுமையான ஆவேசத்துடன் மதிமுக செயலர் வைகோ தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது.

இதைக்கண்டித்து தர்ணா போராட்டம் செய்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த வைகோவை பொலிஸார் தடுத்தனர். ஆனால் ஆவேசமாக தடையை மீறி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே சென்று அங்குள்ள மாவீரர் மண்டபத்தில் அமர்ந்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பது தொடர்பாக பழ.நெடுமாறன், முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் பதிலேதுமில்லை. அடுத்த அவர் தா. பாண்டியன் மூலமாக பேசி வந்தார். அப்போதும் சரியான பதிலில்லை. இதையடுத்து கடந்த 8ம் தேதி நினைவு முற்றம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த முற்றத்தை இடித்து தள்ள ஆணையிட்டுள்ளார் ஜெயலலிதா. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது.

கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார். ஆனால், லட்சோப லட்சம் மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! இது போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது. கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் காறித்துப்புவார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச்சமம்.

முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. நாங்கள் உள்ளே போவோம். அதை தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே கிடையாது என்றார் வைகோ கடுமையான ஆவேசத்துடன்.

TAGS: