பொங்கலுக்கு ‘கோச்சடையான்’

Kochadaiyaanரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

“கோச்சடையான்’ என்ற தமிழ் மன்னரின் வாழ்க்கையைத் தழுவி சாகசங்கள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டுள்ள படம் “கோச்சடையான்’. ஈராஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், தந்தை – மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.

தீபிகா படுகோனே, ஷோபனா ஆகியோர் கதாநாயகிகளாகவும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் மேற்பார்வையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வைரமுத்து உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் மற்றும் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிராபிஃக்ஸ் தொழில்நுட்பத்துக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் இருந்ததால், குறிப்பிட்ட நேரத்தில் படத்தின் பணிகள் முடிவடையாமல் இருந்தன. இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் குரலில் படத்தில் இடம் பெறும் “எங்கே போகுதே வானம்….’ என்ற பாடலும் படத்தின் டீஸரும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

விஜய் நடிக்கும் “ஜில்லா’, அஜித் நடிக்கும் “வீரம்’ ஆகிய படங்களும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளன.