தே.மு.தி.க.வில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா

panசென்னை, டிச. 10-தே.மு.தி.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், உடல்நலக் குறைவு மற்றும் வயது வயது மூப்பு காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவி மட்டுமின்றி தே.மு.தி.க. அவைத்தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்ததலைவர் பொறுப்பில் இருந்தும் இன்று முதல் விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவி விலகல் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், “எனது உடல்நிலை சரியில்லை, மருத்துவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே, இன்று முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். அத்துடன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

கடந்த 8 ஆண்டுளுக்கும் மேலாக தங்களுடன் இணைந்து பணியாற்றியபோது தாங்கள் காட்டிய அன்பு மற்றும் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சேரும்போது மகிழ்ச்சியும், பிரியும் போது வருத்தமும் ஏற்படுவது இயற்கை. எனக்கு வாக்களித்து என்னை தேர்வு செய்த ஆலந்தூர் மக்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

1937-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பணியாற்றியிருக்கிறார். தி.மு.க. உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1971-77 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் அ.தி.மு.க., பா.ம.க.வில் இணைந்து பணியாற்றினார். பண்ருட்டி தொகுதியில் இருந்து 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று சில காலம் ஒதுங்கியிருந்த அவர், தே.மு.தி.க. தொடங்கியபோது அக்கட்சியின் அவைத்தலைவராக பொறுப்பேற்றார். அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி ஏற்பட முக்கிய பங்கு வகித்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, கட்சியில் இப்போது உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்ற கருத்தும் உள்ளது.

ஏற்கனவே கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி சவால் விடுத்து வரும் சூழ்நிலையில், கட்சியை வழிநடத்தி வந்த முக்கிய தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

TAGS: