தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

adidravidarமாநிலத்தின் பல பகுதிகளில், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சில பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று சமகல்வி இயக்கம் எனும் தன்னார்வ அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டுவருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.

தலித் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இப்பள்ளிகளில் சிறப்பான கல்வியை அவர்களுக்கு வழங்கவில்லை என்பது மிகவும் வருத்தமும் வேதனையும் அளிக்கும் விஷயம் என்று இந்த ஆய்வை நடத்திய சமகல்வி அமைப்பின் செயலர் செல்வகுமார் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தின் ஆறு வட மாவட்டங்களிலுள்ள 90 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்வது, சுமார் ஒரு கிலோமீட்டர் வரை சென்று பள்ளிக்காக குடிநீர் கொண்டு வருவது, பள்ளியினருக்காக தேநீர் வாங்கி வருவது, பள்ளி வளாகத்தை துப்புரவு செய்வது போன்ற பல வேலைகளை மாணவர்கள் செய்யும்படி பணிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

பல பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் பார்வைக்கு அனுப்பப்படும் எனவும், தமிழக அரசின் அதிகாரிகளிடமும் கையளிக்கப்படும் எனவும் செல்வகுமார் கூறுகிறார்.

தமிழகத்தில் தலித் மக்களுக்காக செயல்படுவதாகக் கூறும் அரசியல் தலைவர்கள் இப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துவது இல்லை என்றும், அதைத் தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் கூறினார். -BBC

TAGS: