வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட தீவிரம்?

veerapan_001வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட கர்நாடக பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கர்நாடக பொலிசார் வீரப்பன் கூட்டாளிகள் என முத்திரை குத்தி ஞானபிரகாஷ், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தூக்கு தண்டனையை எதிர்த்து வீரப்பனின் கூட்டாளிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தூக்கு தண்டனை திகதி வேறு திகதிக்கு மாற்றப்படும் என்றும் 6 வார காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதற்கிடையே தூக்கு தண்டனை கைதிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும், அவர்கள் குற்றமற்றவர்கள், வீரப்பனை நேரில் கூட ஒருமுறை கூட பார்க்காதவர்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை இந்த வழக்கு மூலமாக தூக்கில் போட வேண்டும் என கர்நாடக அரசும், பொலிசாரும் துடிக்கிறார்கள் என தூக்கு தண்டனை கைதிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் ஏற்பட்டது.

மேலும் தூக்கு தண்டனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரப்பன் கூட்டாளிகளின் ஆதரவாளரும், உறவினருமான அந்தியூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜூலியஸ் தமிழக முதல்வர், தி.மு.க. தலைவர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோரிடம் கேட்டு கொண்டார்.

இதற்கிடையே அடுத்த மாதம் பிப்ரவரி 13ம் திகதிக்குள் வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்ற பரபரப்பான சூழ்நிலை உள்ளது.

அப்படி தீர்ப்பு வந்தால் அடுத்த கணமே சைமன், பிலவேந்தினரன், ஞானப்பிரகாஷ், மீசை மாதையன் ஆகியோரை தூக்கில் போட கர்நாடக பொலிசாரும் சிறைத்துறையும், அதற்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டு உள்ளது.

இதுதொடர்பாக வீரப்பன் கூட்டாளிகளாக சித்திகரிக்கப்பட்டுள்ள 4 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்தற்காக பல கட்டங்களில் போராடி வரும் அந்தியூர் வழக்கறிஞர் ஆ.ஜூலியஸ் கூறுகையில், கர்நாடக அரசும், சிறைத்துறையும் பாலாறு வெடிகுண்டு வழக்கில் பழி தீர்ப்பதற்காக தமிழர்களான சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாஷ், மீசை மாதையன் ஆகிய 4 பேரை எப்படியாவது தூக்கில் போட வேண்டும் என்று துடிக்கிறது.

கர்நாடக டி.ஐ.ஜி. வீரபத்ரசாமி, இதற்காக தீவிர முயற்சி செய்து வருகிறார். வீரப்பன் கூட்டாளிகளை தீர்ப்பு வந்ததும் மறுபேச்சின்றி உடனடியாக தூக்கில் போட துடித்து கொண்டிருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட ஞானப்பிரகாஷ், கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் உள்ள ஒரு பாதிரியார் வீட்டு தோட்டத்தில் வெடிகுண்டு சம்பவம் நடத்த அன்று வேலை செய்துள்ளார்.

இவருடன் அதே நாளில் வேலை பார்த்த மகிமைதாஸ் என்பவர் தடா கோர்ட்டில் ஞானப்பிரகாசுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் இது கர்நாடக சிறை அதிகாரிகளால் மறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பிலவேந்திரன் சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் ராயர் பாளையம் அருகே உள்ள அனுமன் பள்ளி என்ற இடத்தில் விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துள்ளார். இப்படி குற்றம் சாட்டப்பட்ட 4 பேருமே இந்த சம்பவத்துக்கு துளியும் சம்பந்தம் இல்லாதவர்கள்.

மேலும் சைமன் என்பவர் மீது பவானி நீதிமன்றத்தில் ரெட்வித் 506 (2)-ன் கீழ் பல வழக்குகள் உள்ளது. ஒருவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது தூக்கு தண்டனை விதிக்க முடியாது. தூக்கில் போடவும் முடியாது.

ஆகவே இவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து தமிழர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு குரல் தெரிவிக்க வேண்டும். அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

TAGS: