கோவை சரளாவுக்கு நடிப்பில் இருக்கும் ஆர்வத்தைப்பார்த்து உடன் நடிக்கும் சக கலைஞர்கள் அசந்து போய் நிற்கிறார்கள்

Kovai-Sarala-Pictureஉதயகீதம் படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. கோயமுத்தூரைச் சேர்ந்தவரான இவர், கோவை தமிழிலேயே பேசி நடிப்பதால் அதுவே அவரை பிரபலப்படுத்தியதோடு அவருக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒரு கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணியுடன் இணைந்து பல படங்களில் நடித்ததால் காமெடி நடிகையாக தன்னை நிறுத்திக்கொண்ட கோவை சரளா, தமிழ் சினிமாவின் பெண் காமெடி நடிகை என்ற பெருமைக்குரியவராகவும் திகழ்கிறார்.

குறிப்பாக, சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அவருடன் டூயட் பாடிய தனது தரத்தை உயர்த்திக்கொண்ட கோவை சரளாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேக்க நிலை ஏற்பட்டது. ஆனால் லாரன்ஸ் இயக்கி நடித்த முனி, காஞ்சனா படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்தது. அப்படத்தில் அம்மா வேடத்தில் நடித்தபோதும் கோவை சரளாவின் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது.

அதையடுத்து, பாகன், தில்லுமுல்லு, மாலினி 22 பாளையங்கோட்டை என பல படங்களில் நடித்தவர், கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இந்த படங்களில் தனது நடிப்பு ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக யதார்த்தமாக நடித்துக்கொண்டிருக்கும் கோவை சரளா, சின்னச்சின்ன ரியாக்ஷனைகூட அற்புதமாக கொடுத்து நடித்து வருகிறாராம். சில காட்சிகளில் தனக்கு போதுமான திருப்தி இல்லையென்றால், அதில் இன்னொரு முறை நடிக்கிறேன் என்று டைரக்டர்களிடம் கேட்டு வாங்கி மீண்டும் நடித்துக்கொடுக்கிறாராம்.

சினிமாவில் நடிக்க வந்து 28 ஆண்டுகளுக்குப்பிறகும் கோவை சரளாவுக்கு நடிப்பில் இருக்கும் ஆர்வத்தைப்பார்த்து உடன் நடிக்கும் சக கலைஞர்கள் அசந்து போய் நிற்கிறார்கள்.