சூர்யாவின் படப்பிடிப்பில் ரகளை

surya_32சூர்யா – சமந்தா இணைந்து நடித்து வரும் அஞ்சான் படப்பிடிப்பில் மும்பை நடனக்கலைஞர்கள் வந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘அஞ்சான்’ படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர், சூர்யா, சமந்தா நடித்த பாடல் காட்சியொன்றை படமாக்கினர்.

நடனஇயக்குனர் ராஜுசுந்தரம் இதற்கான நடனத்தை அமைத்து கொடுத்தார். சென்னையில் இருந்து சென்ற நடன கலைஞர்களுடன் சூர்யா, சமந்தா ஆட இக்காட்சி படமாகிக் கொண்டு இருந்தது.

அப்போது மும்பையைச் சேர்ந்த இந்தி நடன கலைஞர்கள் கும்பலாக அங்கு வந்தனர். நடன கலைஞர்கள் முப்பது சதவீதம் பேரை மும்பை நடன கலைஞர்கள் சங்கத்தில் இருந்துதான் பணியாற்ற தெரிவு செய்ய வேண்டும். வெளியாட்களை வைத்து படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று கோஷம் போட்டார்கள்.

அதோடு நிற்காமல் படப்பிடிப்பை நிறுத்தும்படி ஆவேசமாக கத்தியபடி கலாட்டாவில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு சாதனங்களை உடைக்கவும் பாய்ந்தனர்.

இதனால் படப்பிடிப்பில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து அஞ்சான் படக்குழுவினர் ரூ.60 ஆயிரம் அபராத கட்டணம் செலுத்திய பிறகே படப்பிடிப்பை தொடர அவர்கள் அனுமதி அளித்தனர். அஞ்சான் படப்பிடிப்பில் திடீர் ரகளை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.