ஊடகவியலாளர்களை மிரட்டும் அரவிந்த் கேஜ்ரிவால்

aravinth_001மத்தியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மோடிக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி சிறைக்கு அனுப்புவோம்’ என்று அந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பணத்துக்கு ஆசைப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் மோடிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தொலைக்காட்சி சேவைகளும் விலை போய்விட்டன. இது பெரும் அரசியல் சதி.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இது குறித்து விசாரணை நடத்தி சதியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாமல் அதில் தொடர்புடைய அனைவரையும் சிறையில் அடைப்போம். கடந்த ஓராண்டாக எந்த டிவி சேனலைப் பார்த்தாலும், மோடி பற்றிய செய்திகள்தான் ஒளிபரப்பப்படுகின்றன.

மோடியை முன்னிலைப்படுத்துவதற்காக டிவி சேனல்களுக்கு பெரும் பணம் கைமாறியுள்ளது. குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 800 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். வெறும் ஒரு ரூபாயை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் நிலங்களை ஒரு நிறுவனம் அபகரித்தது. இவற்றையெல்லாம் எந்த சேனலும் ஒளிபரப்பவில்லை’ என்றார் கேஜரிவால். அவரது இந்த பேட்டி சேனலில் ஒளிபரப்பானவுடன் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அவரது இந்த கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

“நாகபுரியில் கேஜரிவால் பேசிய கருத்துகளை டிவியில் பார்த்து திகைத்துவிட்டேன். டிவி செய்தியாளர்களை சிறையிலடைப்பேன் என அவர் பேசியது பாசிஸ மனப்போக்கை வெளிக்காட்டி விட்டது. அவர்கள் (ஆம் ஆத்மி) நகரவாசிகள் வேடத்தில் இருக்கும் மாவோயிஸ்டுகள்.

காங்கிரஸுக்கு ஆதரவாக கேஜரிவால் நடந்து கொள்கிறார். ராகுல் காந்தியைப் பற்றி அவர் எதுவுமே பேசுவதில்லை. மாறாக மோடியை தாக்கிப் பேசி பலனை அடையவிரும்புகிறார் ‘ என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக சாடியுள்ளார்.

“நிர்வாகம் செய்யத் தெரியாமல் நழுவி ஓடியவர் கேஜரிவால். அவரால் மீடியாக்களை எதுவும் செய்ய முடியாது’ என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா கருத்து கூறுகையில், “அண்மைக்காலமாகவே தான் பேசிய கருத்திலிருந்து முற்றிலும் மாற்றிப்பேசி வருகிறார் கேஜரிவால். அவர் இப்போது தெரிவித்த (மோடி பற்றிய) கருத்தை இடதுசாரிகள் நீண்டகாலமாகவே பேசிவருகின்றனர். பெரும் நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து மோடிக்கு ஆதரவாகத் திரண்டு நிற்கின்றன. கேஜரிவாலும் அதே குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஒருகாலத்தில் மீடியாக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது’ என்றார்.

இந்நிலையில் “டிவி சேனல்கள் குறித்து அப்படியெல்லாம் பேசவில்லை; எதுவுமே கூறவில்லை. மீடியாக்களைப் பார்த்து நான் ஏன் வருத்தம் கொள்ளவேண்டும்?’ என்று கேஜரிவால் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

TAGS: