இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்

narendra_modizஇந்தியாவின் 15 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் 44 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நடைபெற்ற விழாவில், மோடிக்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜேட்லிக்கு நிதியமைச்சகமும் கூடுதலாக பாதுகாப்புத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அமைச்சர்

சுஷ்மா ஸ்வராஜ் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்களான வெங்கைய்யா நாயுடு மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் அமைச்சர்களாகியுள்ளனர்.

நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பேச்சாளர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவ்டேகர் ஆகியோருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சு பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கன்னியாகுமரித் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் மோடி தலைமையிலான அமைச்சரவையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியான ஜெனரல் வி.கே. சிங்குக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மனேகா சஞ்சய் காந்தி புதிய அமைச்சரவையில் மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராகியுள்ளார்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருத்தி இராணி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

அடுத்து அவர் ராஜ்ய சபா உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

அமைச்சரவையில் 44 பேர்

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதியும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவும் காபினெட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் தவிர கூட்டணியின் கட்சியினருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், 23 காபினெட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய 10 இணை அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும் அடங்குவர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் இந்த பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட தெற்காசியத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வைபவம் நடக்கும் இடத்தைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இராணுவ ஸ்னைப்பர் துப்பாக்கி வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் பொருத்திவைக்கப்பட்டிருந்தன. -BBC

TAGS: