இந்திய – சீன எல்லைப் பிரச்னையை தீர்க்க வரலாற்று சந்தர்ப்பம்

“”வலுவான தலைவர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என்று சீனாவின் “குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி வருகை தந்துள்ளார்.

இதுபற்றி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணிபுரியும் லாங் ஜிங்சுன் கூறியதாக “குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தி:

“”பிராந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், குறிப்பாக மேற்கு சீனாவின் அமைதிக்கு இந்தியாவின் பங்கு முக்கியம்.

சீனாவின் மேற்குப் பகுதியில் ஜின்ஜியாங், திபெத் ஆகியவை உள்ளன. இப்பகுதி இந்தியாவுடனான 4,000 கி.மீ. தூரத்துக்கும் அதிகமான, பிரச்னைக்குரிய எல்லையையொட்டி அமைந்துள்ளது.

அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கான பாதுகாப்பான சூழலைப் பெறுவதற்கு சீனாவின் ஆதரவும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற அமோக வெற்றி காரணமாக, 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியா வலுவான அரசையும், தலைமையையும் தற்போது கொண்டுள்ளது.

இந்தியாவின் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் மிகவும் சக்தி வாய்ந்த அதிபராக திகழும் ஜி ஜின்பிங்கிற்கும் இருநாட்டு எல்லைப் பிரச்னைக்கு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் தீர்வு காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவுடன் நடத்திய சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டு வருகிறது.

TAGS: