தமிழ்நாட்டு சிறப்பு முகாம்களில் தொடரும் அவலம்!

in-002திருச்சி சிறப்புமுகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவரூபன் எனும் 27 வயது வாலிபர் கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறப்புமுகாமில் எந்தவிதமான வழக்குகளுமின்றி அடைக்கப்பட்டுள்ளார். விடுதலை எப்பொழுது என்றே தெரியாது இருந்து வந்த இவர் தன்னை விடுதலை செய்யக்கோரி கடந்த ஜூன் 10 ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தார்.

அப்பொழுது காவல்துறையினர் இவரை மிரட்டி உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் அதிகப்படியான தூக்க மாத்திரையை பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சி செய்து மயங்கிச் சரிந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட அவர் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அப்பொழுது தாசில்தாரை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவரை சிறப்பு முகாம் பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ள நீலகண்டன் என்ற காவல்துறை ஆய்வாளர் கடுமையாக தாக்கி, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அத்துடன் தேவரூபனின் கழுத்தை பிடித்து உள்ளே தள்ளிக் கதவை பூட்டி விட்டது மட்டுமல்லாமல் “அகதி நாய்கள்” என்றும் “ஈழத்து நாய்கள் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்.  தாசில்தார் யாரையும் அழைக்க முடியாது  என்று கேவலமான வார்த்தைகளால் தரக்குறைவாகத் திட்டியுள்ளதுடன் தேவரூபனின் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் விரத்தியடைந்த தேவரூபன் தனது கையை அறுத்துக் கொண்டு சாகப் போவதாக தெரிவித்துள்ளார். கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்ற போது அந்த காவல் ஆய்வாளர் தேவரூபனின் உயிரை காப்பாற்றுவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் “செத்தால் சாகட்டும்” என்றும் சக முகாம் வாசிகள் தேவரூபனுக்கு எதுவித முதலுதவிகளும் வழங்ககூடாது என்று மிரட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து அகன்று சென்று விட்டதாக தெரிகின்றது.

தேவரூபனின் நிலைமை கவலைக்கிடமானதை தொடர்ந்து முகாமில் இருந்த அகதிகள் அவர் வைத்திருந்த கத்தியை பறித்தெடுத்துள்ளதுடன் மேலதிகாரிகளுக்கு நேரடியாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலதிகாரிகள் வந்த பின்னரே தேவரூபன் வைத்தியசாலைக்கு தூக்கி செல்லப்பட்டுள்ளார்.

அதிகப்படியான இரத்த இழப்பின் காரணமாக தேவரூபன் முழுமையாக மயங்கிய நிலையில் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வைத்தியசாலைக்கு தூக்கி செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போது தேவரூபனுக்கு திருச்சி பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோழர்களே ஈழத்தில் சிங்கள இனவெறி இராணுவம் செய்துவரும் கொடுமைகளுக்கு சற்றும் குறையாத வகையில் தமிழக சிறப்பு வதை முகாம்களில் நமது தொப்புள்கொடி உறவுகள் வதைக்கப்படுகிறார்கள். நம் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் இந்த கைவிடப்பட்ட மக்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்.

ஈழத்தமிழர்களை துன்புறுத்தும், நீலகண்டன் என்ற காவல்துறை ஆய்வாளர்

TAGS: