100 கோடிக்கு மேல் எதிர்பார்க்கும் ‘அஞ்சான்’…!

 

Anjaan 07‘அஞ்சான்’ படத்தை எப்படியாவது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வைத்து விட வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம். சூர்யா – சமந்தா என புது ஜோடியுடன், முற்றிலும் இளமையுடன் படத்தை எடுத்திருப்பதால் இளைஞர்களை இந்தப் படம் அதிகமாகவே கவரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாம்.

செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சுமார் 70 கோடி வரை படத்திற்கு செலவு செய்திருக்கிறார்களாம். படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். தெலுங்கிலும் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

கண்டிப்பான வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் சூர்யா இந்த படத்தை மிகவும் நம்புகிறாராம். அதனால்தான் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம். அதோடு அவருக்கும் சமந்தாவுக்குமான ‘கெமிஸ்ட்ரி’ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம்.

தமிழில் நம்பர்-1 அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதற்காக சமந்தா மிகவும் தாராளமாக நடித்திருக்கிறாராம். லிங்குசாமி கடைசியாக இயக்கிய ‘வேட்டை’ படம் சுமாராகத்தான் ஓடியது. அந்தப் படம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த படத்தின் வெற்றிதான் ஒரு இயக்குனராக தன்னை நிலை நிறுத்தும் என லிங்குசாமி நினைக்கிறாராம்.

முற்றிலும் மும்பையில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதை. அஜித், விஜய் இருவரும் தற்போதுதான் மும்பை தாதாக்களை அழித்தார்கள். இப்போது சூர்யா அவர்களை எதிர்த்து அழிக்கப் போகிறாராம்.

சமீபத்திய மும்பை சென்டிமென்ட்டில் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார்கள் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். விரைவில் படத்தின் இசையை பிரம்மமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் 15 அன்று படம் வெளியாக உள்ளது.