தமிழக மீனவர்களை இந்திய கடற்படை பாதுகாக்கும்: அருண் ஜேட்லி

arun-jetlyபாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக இந்தியக் கடற்படை, இந்திய கடலோர காவல் படை ஆகியவை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

இலங்கைக் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதைக் கண்டறிந்தால், அவர்களிடம் அந்நாட்டுக் கடற்படையினர் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இரு நாடுகளைப் பிரிக்கும் கடல் எல்லையைக் கடக்கும் இந்திய, இலங்கை மீனவர்களை பரஸ்பரம் நேர்மையுடன் கையாளுவதற்கு இரு நாடுகளும் நடைமுறை ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக இந்திய மீன்பிடிப் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை என்றும், இலங்கையின் கடற்பகுதியின் பதற்றமான பகுதிகளில் இந்திய மீன்பிடிப் படகுகள் நுழையாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.

மத்திய அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக, கடந்த 2013ம் ஆண்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 676 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதே போன்று, இந்த ஆண்டில் ஜூலை 18ம் தேதி வரை கைதான 541 மீனவர்களில் 536 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருதரப்பு மீனவர்களின் பிரச்னை தொடர்பாக தீர்வு காண நிகழாண்டில் இந்திய, இலங்கை மீனவர்களின் சங்கங்கள் இடையேயான பேச்சுவார்த்தை சென்னையிலும், கொழும்பிலும் நடைபெற்றுள்ளது. அரசின் முயற்சியால்தான், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் யாரும் உயிரிழந்த சம்பவங்கள் ஏதும் 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் இல்லை.

இந்திய கடலோரக் காவல் படையினர் இந்திய மீனவர்களுக்கு, கடலில் தேவையான உதவிகளை அளித்து வருகின்றனர். வழக்கமான ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அருண் ஜேட்லி கூறினார்.

TAGS: