ஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!

கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் படங்களில் ஒன்று ஐ.

விக்ரம்-ஷங்கர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும்  படம்தான் இது. ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் அந்தியன் படம் வெளியானது. ஐ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

‘ஐ’ படத்திற்காக, இயக்குனர் ஷங்கர் ரொம்பவே மெனக்கெட்டிருப்பதாகவும், பல புதிய அம்சங்களையும் தொழில்நுட்பங்களையும் கையாண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கின்றன. கூடவே விக்ரமும் தன் பங்கிற்கு அசத்தியிருக்கிறாராம்.

இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் ஐ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு, ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அர்னால்டுவை அழைப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்த அர்னால்டு ‘ஐ’ படம் பற்றியும் சிலாகித்துப் பேசினாராம். குறிப்பாக ஹீரோ விக்ரம் இப்படத்திற்காக 120 கிலோ, 70 கிலோ, 50 கிலோ என தன்னை உருமாற்றி நடித்திருப்பதைப் பற்றியும் வியந்து பேசினாராம்.