கடையடைப்பு, வேலைநிறுத்தம் வேண்டாம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. மக்களின் அன்றாடப் பணிகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஜெயலலிதாவின் மீதுள்ள அன்பால், பாசத்தால், மாறாப் பற்றால் அதிமுகவினரும், மக்களும், சில அமைப்புகளும் தாங்களாகவே உணர்ச்சிவயப்பட்டு நடத்தும் போராட்டங்களுக்கு தமிழக அரசை இணைத்துப் பேசுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

வளர்ச்சிப் பாதையில் தமிழகம்: வளர்ச்சித் திட்டங்கள் விரைவாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, கடந்த 40 மாதங்களாக அவற்றைச் செயல்படுத்தியும் காட்டினார். தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்து வருகின்றன. வளர்ச்சிப் பணிகள் விரைவாக நடைபெற்றும் வருகின்றன. மொத்தத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய 2023 தொலைநோக்குத் திட்டம், தொழில் கொள்கை ஆகியவற்றிலுள்ள இலக்குகளை அடைவதற்கான வழியில் தமிழகத்திலுள்ள அமைப்புகளும், சங்கங்களும், மக்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் சூழலில், எதிர்க்கட்சியினரின் மாய வலையில் விழ வேண்டாம் என தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் விரும்பத்தக்கது அல்ல. எனவே, கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

TAGS: