திருப்பதியிலேயே உன்னைப் பார்க்கக் கூடாது!- தமிழ் மீடியாவை தாக்கிய தெலுங்கு போலீஸ்

mahinda-tirupathyஇலங்கையில் அடித்து நொறுக்கியது போதாது என்று இப்போது இந்தியாவுக்கு வந்து, தமிழர்களை வதைப்பதற்கு வழி செய்துவிட்டுப் போயிருக்கிறார் ராஜபக்‌ச.

இலங்கை அதிபர் ராஜபக்‌ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திருப்பதிக்குச் சென்ற தமிழ் உணர்வாளர்கள், தமிழக ஊடகவியலாளர்ககள் மீது ஆந்திர போலீஸ் நடத்திய கொடூரத் தாக்குதல், தமிழகத்தில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜபக்‌ச தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனத்துக்காகக் கடந்த 9-ம் தேதி திருப்பதிக்கு வந்தார். தரிசனம் முடித்துவிட்டு, ராஜபக்‌ச, 3.30 மணிக்கு வெளியே வருவார் என தகவல் பரவியது.

கறுப்புக் கொடி காட்டுவதற்காக மல்லை சத்யா தலைமையிலான ம.தி.மு.கவினர் ஆங்காங்கே பதுங்கி இருந்தனர். ராஜபக்‌ச வாகனம் வந்த சமயத்தில் வெளியே வந்த மல்லை சத்யா உள்ளிட்ட ம.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே ஆந்திர போலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்தனர். செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக ஊடகவியலாளர்களையும் ஆந்திர போலீஸார் தாக்கினர்.

ராஜபக்‌சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுக்க வலுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், அவருக்கு மத்திய அரசு இரண்டாவது முறையாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது.

ராஜபக்‌ச வாகனம் வருவதற்கு முன்பாக, ஜாமர் வாகனம் வந்தது. அதிரடியாக நுழைந்து கோஷமிட்டோம். போலீஸார் எங்கள் மீது தடியடி நடத்தினர். எங்களை வானில் ஏற்றி ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டனர்  என்றார் மல்லை சத்யா.

புதியதலைமுறை டி.வி செய்தியாளர் மணிகண்டன், ”காலை ரெண்டரை மணிக்கு சன் டி.வி டீம் உட்பட நாங்க 10 பேர் இருந்தோம்.

சப்தகிரி கெஸ்ட் ஹவுஸ் பக்கத்துல ம.தி.மு.க. காரங்க போராட்டம் செஞ்சிட்டு இருந்தாங்க. அதை வீடியோ எடுக்க ஆரம்பிச்சோம்.

அப்போ, கோபத்தோடு எங்களை நெருங்கிய ஏ.எஸ்.பி சுவாமியும் டி.எஸ்.பி நரசப்பாவும் மற்ற போலீஸ்காரங்களும் ஆக்ரோஷமா ஓடி வந்து என் கழுத்தைப் பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டுப் போய், போலீஸ் வேன்ல தூக்கிப்போட்டனர்.

இதையெல்லாம் எங்க கேமரா மேன் மது பதிவு செஞ்சார். அவருடைய கேமராவைப் பறிச்சு போட்டு உடைச்சாங்க. எங்க கேமரா உதவியாளர் தினேஷையும் தாக்கினாங்க.

அவருடைய தங்கச் செயின் அறுந்து காணாம போச்சு. என் செல்போனை உடைச்சிட்டாங்க. எங்க திருத்தணி ரிப்போர்ட்டர் நரேஷ் தலையில வயர்லெஸ் கருவியை வெச்சு அடிச்சாங்க. தந்தி டி.வி கேமராமேனையும் அடிச்சாங்க’ என்றார்.

மாலைமுரசு நிருபர் வினோத், ”திருமலை செல்லும் அலிபிரி பகுதியில் 9-ம் தேதி மாலை 5.10 மணிக்கு ராஜபக்‌ச கார் கடந்து சென்றது. அதைப் படம் எடுத்தப்போ, அங்கிருந்த போலீஸ் எஸ்.பி கோபிநாத் கேமராவைப் பிடுங்குமாறு இன்ஸ்பெக்டர் சரத்சாகருக்கு உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் அதைப் பிடுங்கி உடைத்தார். 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றி வளைத்து, துப்பாக்கி கட்டையால் என் முதுகில் குத்தினர்.

‘தமிழ் பத்திரிகையாளர்களுக்கு அனுமதியே இல்லை. இங்கே எப்படிடா வந்தீங்க… நாய்களா’ என்று திட்டினர். ஒரு காரில் ஐந்து கிலோ மீட்டர் தாண்டி ஓர் இடத்தில் இறக்கி, ‘திருப்பதியிலேயே உன்னைப் பார்க்கக் கூடாது.

ஓடிப் போயிடு’ என்று எச்சரித்து அனுப்பினர். 10-ம் தேதி காலை 8 மணிக்கு ராஜபக்‌ச தரிசனம் முடித்துவிட்டு வரும்போது அதே அலிபிரி அருகில் நின்று படம் எடுத்தேன்.

அங்கிருந்த போலீஸார், ‘நீ இன்னும் தமிழ்நாட்டுக்குப் போகலையா?’ என்று துப்பாக்கியால் முதுகில் குத்தி, கேமராவையும் பறித்தனர்.

ஆந்திர போலீஸார் இந்தியாவில் பணிபுரிகிறார்களா, ராஜபக்‌ச அரசாங்கத்தில் பணிபுரிகிறார்களா?” என்று கொந்தளித்தார்.

தமிழக நிருபர்கள் மீது வழக்குத் தொடுக்கும் முஸ்தீபுகளில் முனைப்பாக இருக்கிறது ஆந்திர போலீஸ்! -http://www.tamilwin.com

TAGS: