சீனாவைக் காட்டி இந்தியாவை மிரட்டுகிறார் ராஜபக்சே : திருமாவளவன்

Thirumaஇலங்கை அதிபராக ராஜபட்ச மீண்டும் வருவது, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் ஆபத்து என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ‘’இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எல்லாவிதமான ஏமாற்று வழிமுறைகளையும் ராஜபட்ச கையாண்டு வருகிறார்.

வடக்கு மாகாணத்துக்கு ஏன் அதிகாரப் பகிர்வு செய்யப்படவில்லை என்று கேட்டால், அவர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை என்று ராஜபட்ச கேலி செய்கிறார்.

இந்தியா பல முறை வலியுறுத்தியும்கூட 13-ஆவது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு செய்ய ராஜபட்ச மறுத்து வருகிறார்.  ஆனால், தமிழர்களைச் சமமாக நடத்துகிறேன் என்று ராஜபட்ச கூறுவது கேலிக்கூத்து.

இந்தியப் பெருங்கடலில் அண்மைக் காலமாக சீனப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சீனக் கப்பல்களுக்கு இலங்கை துறைமுகங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன.

இதனால், இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  இந்தியா எங்களுக்கு உறவு, சீனா எங்களுக்கு நட்பு என்று கூறும் ராஜபட்ச, சீனாவைக் காட்டி இந்தியாவை மிரட்டுகிறார்.

போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் ராஜபட்ச, அதிலிருந்து தப்பிப்பதற்காகவே அவசரமாகத் தேர்தலை நடத்துகிறார்.

ராஜபட்ச மீண்டும் அதிபராவது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமில்லை. தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும்கூட ஆபத்தாகவே முடியும்.  இதனை, மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: