குஜராத் துறைமுகத்தை தகர்க்க தீவிரவாதிகள் வந்தனர்: வெடிகுண்டு படகு பற்றி புதிய தகவல்

terrபுதுடெல்லி, ஜன. 7–

இந்தியாவில் மீண்டும் ஒரு தடவை மிகப் பெரிய நாசவேலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள இருப்பதால், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைவரிசை காட்டக்கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் நாசவேலை செய்யும் சதி திட்டத்துக்கு 9 குழுக்களை பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர் – இ – தொய்பா இயக்கம் உருவாக்கி இருக்கிறது. அந்த குழுக்கள் ஒவ்வொன்றிலும் தலா 30 முதல் 40 தீவிரவாதிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த தீவிரவாத குழுக்களை இந்தியாவுக்குள் எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்று கடந்த சில தினங்களாக லஷ்கர்–இ– தொய்பா தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளது.

காஷ்மீர் எல்லையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதல்கள் நடத்த, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய, தினமும் முயற்சிகள் நடக்கிறது. ஆனால் அவற்றை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து வருகிறார்கள்.

தரை மார்க்கமாக ஊடுருவ தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர் தோல்வி அடைந்ததால் கடந்த 31–ந் தேதி லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகளின் தற்கொலை படை ஒன்று வெடிகுண்டுகள் நிரப்பிய படகுடன் கராச்சி அருகில் இருந்து புறப்பட்டு வந்தது. அந்த வெடிகுண்டு படகு புறப்பட்டு வருவதை உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் கண்டுபிடித்து கடலோர காவல் படையினரை உஷார் படுத்தினார்கள்.

இதன் காரணமாக அந்த வெடிகுண்டு படகு குஜராத் கடல் பகுதியில் மடக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த படகில் இருந்த தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டனர்.

பாகிஸ்தானில் இருந்து வந்த மற்றொரு வெடிகுண்டு படகு தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய கடலோரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெடிகுண்டு படகுகளுடன் வந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய நாசவேலை திட்டத்துடன் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. குஜராத்தில் உள்ள போர்பந்தர் கடற்படை தளத்தை தகர்த்து அழிக்கும் திட்டத்துடன் தீவிரவாதிகள் வந்தது அம்பலமாகி உள்ளது.

டன் கணக்கில் வெடி குண்டுகளுடன் வந்த அந்த படகுகளை கடற்படை துறைமுகத்துக்குள் வேகமாக செலுத்தி மோத வைத்து, மிகப்பெரிய அழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் திட்டமாகும். அந்த படகுகள் மட்டும் தடுக்கப்படாமல் இருந்தால் போர்பந்தர் கடற்படை தளத்துக்கு மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

போர்பந்தரில் உள்ள கடற்படை தளம் சமீபத்தில் நவீனமாக சீரமைக்கப்பட்டது. அதிநவீன கப்பல்கள், விமானங்களை இயக்கும் வசதிகள் அந்த தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது லஷ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த தளத்தை அழிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

-http://www.maalaimalar.com

TAGS: