கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் தினமும் மீன் பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வருவதாக தெரிவித்தும், போதை பொருட்கள் கடத்தியதாக பழி சுமத்தியும் இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி சிறைபிடித்து செல்வதும் தொடர் கதையாகியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 6 சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் 30 பேர் அங்கு வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் அவர்கள் அங்கிருந்த 20 விசைப் படகுகளில் ஏறி ஏற்கனவே மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை மதிப்புமிக்க மீன்களையும் கடலில் தூக்கி எறிந்தனர். வலைகளையும் அறுத்து எறிந்து சேதப்படுத்தினர்.
இலங்கை கடற்படையினர், தொடர்ந்து இந்த பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடித்து செல்வோம் என கூறி அவர்கள் கொண்டு வந்திலுருந்த கல் மர்றும் போத்தல்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கினர்.
இதில் ராமர் என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பீதி அடைந்த மீனவர்கள் உயிர்பிழைத்தால் போதும் என்ற கருதி பாதியிலேயே கரை திரும்பினர்.
இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் கூறுகையில், நாங்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்க கூடாது என்று கூறி வலைகளையும், மீன்களையும் தூக்கி எறிந்து சேதப்படுத்தினர்.
கற்களால் தாக்கியதில் மீனவர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மேலும் அவர்கள் எங்களை பூட்ஸ் காலால் மிதித்து கொடுமைப்படுத்தினர். இதனால் நாங்கள் பாதியிலேயே கரை திரும்பினோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.
இலங்கையில் அண்மையில் நடந்த தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். தமிழர்களின் ஆதரவில் வெற்றி பெற்ற சிறிசேனா ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக மீனவர்கள் மீது நடைபெற்ற கொடூர தாக்குதல் இதுவாகும்.
ஆட்சி மாற்றம் நடந்த பின் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அணுகுமுறை மாறும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என அந்த இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-http://www.tamilwin.com


























இது வேதனை அளிக்கிறது.தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு முழு சுதந்திரத்துடன் சென்றுவரும் நிலை ஏற்பட வேண்டும். அதுவரை தமிழக மீனவர்களுக்கு நிம்மதி இல்லை. தமிழினம் இதில் ஒன்றுபட்டு செயல் படவேண்டும்.
தமிழனுக்கு அறி……இல்லை.இந்தியா கச்சா தீவை இலங்கைக்கு பரிசாக கொடுத்து விட்டது.வட மக்களுக்கும் சந்தோசம். பிறகு ஏன் அங்குபோய் மீன் பிடிக்க வேண்டும்.
எங்கள் மண்ணை தானம் செய்ய இந்தியாவுக்கு என்ன உரிமை? கச்சா தீவு தமிழர் நாட்டுக்கு சொந்தமானவை! இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
வேங்கையன் சார், கச்சத் தீவை இலங்கைக்குத் தானம் செய்தவர்கள் தமிழக அரசியல்வாதிகள். தனித் தமிழர் நாடு வேண்டும் என்று நாம் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். நமக்குப் பணமுடை ஏற்பட்டால் நாம் தமிழ்நாட்டையே விற்று விடுவோம்! அந்த அளவுக்கு நாம் இனப்பற்று, மொழிப்பற்று உள்ளவர்கள்! நாம் ஒரு குடிகார சமுதாயம். நாம் மற்றவர்களுடைய தயவில் காலத்தை ஓட்டக்கூடியவர்கள். இப்போதைக்கு நாம் தனித்தமிழர் நாடு என்பதை ஒரு தமாஷான விஷயமாக எடுத்துக் கொள்வோம்!
6 கோடி தமிழர்கள் வாழும் தமிழர்களிடையே முன் நின்று வழிநடத்த ஒரு தமிழனை காணோம். நாலு தமிழனும் ஐந்தாவது மாற்று இனத்தவனும் சேர்ந்திருந்தால், நாலு தமிழனும் சேர்ந்து அந்த ஐந்தாவது மாற்றானைதானே தலைவனாக தேர்வு செய்வர். தமிழனுக்கு முதல் எதிரி தமிழன்தானே. தமிழினத்திலேதான் சமத்துவமும் உண்மை நீதியும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் நாம் நியாயத்தோடு திறமைசாலிகள் நம் இனத்தை சாராதிருந்தாலும் அவரை தேர்வு செய்கிறோம். இப்படியிருக்க தனி நாடு கோருவதில் என்ன அர்த்தம் உள்ளது. மற்றவருடன் சேர்ந்து வாழ்வதில் நமக்கென்ன தடைகள். உலகில் மற்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் தனியாட்சி பெற்றா வாழ்கிறார்கள்? அந்த நாடுகளில் நம்மவர்கள் சிறப்பாக வாழவில்லையா? அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்கு தத்தம் பங்கினை செலுத்தவில்லையா? அவர்களுடைய பங்காளிப்புகள் அங்கிகரீக்கப்படவில்லையா?. ஐக்கிய அமெரிக்க நாட்டில் NASA என்னும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கள் பணியை ஆற்றும் தமிழர்கள் மதிக்கப்படவில்லியா? இந்தியாவில்கூட நாட்டின் தேசியமொழியாகிய ஹிந்தியை படிக்க வலுக்கட்டாயமாக மறுத்த அதே வேளையில் மற்றவர் தத்தம் மொழிகளோடு ஹிந்தியையும் கற்று அரசாங்க பதவியில் தமிழர்களைவிட அதிகமாகவே உள்ளனர். அதற்க்கு யார் காரணம்? நமது மொழியோடு மேலும் ஒரு மொழியை கற்பதில் நமக்கு நட்டம் என்ன? நமது மொழியை கற்று வளர்ப்பதும் பாதுகாப்பதும் நமது கடமையாகும். ஆனாலும் நாம் மொழி வெரியர்காகிவிடக்கூடாது. சிந்த்தித்து செயல்பட இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.