கெஜ்ரிவாலை நீக்க முயற்சி..உடைகிறதா ஆம் ஆத்மி? டெல்லியில் பரபரப்பு

kejriwaal_001கெஜ்ரிவாலை சுற்றியே ஆம் ஆத்மி கட்சி வளர்கிறதோ என்ற பின்னணியில் அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 6ம் திக‌தி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கட்சிக்குள் முன்னணி தலைவர்கள் பலர் தங்களது அதிருப்திகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நமக்காக உழைத்த தொண்டர்கள் தான் கட்சியின் வெற்றிக்கு காரணம்.

ஆனால் அவர்களுக்கு தர வேண்டிய பாராட்டை நாம் தரவில்லை. மீண்டும் ஒரு தனி நபரை சுற்றியே நமது கட்சியும் வளர்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கட்சிக்கு சந்தேகத்திற்கிடமான நான்கு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தலா 5 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு இருக்கிறது.

10 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் நிதியை யார் அனுப்பினாலும், அவர்கள் நேர்மையானவர்கள் தானா என விசாரிக்க வேண்டும்.

ஆனால் 20 லட்சம் ரூபாய் பெறப்பட்ட விட‌யத்தில் நாம் சரியாக விசாரிக்கவில்லையோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

யாதவ் மற்றும் பூஷண் கடிதங்களுக்கு கட்சி மேலிடம் இதுவரை பதில் அனுப்பாததோடு, கட்சித் தலைவர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நாளை டெல்லியில் முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், இது நடந்தால் கட்சி உடையும் என்றும் பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில் கட்சி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் இதுகுறித்து கூறுகையில், சிலர் கட்சியை கேலிக்கூத்தாக்கி விட்டனர். மூத்த தலைவர்கள் சிலர் கெஜ்ரிவாலை நீக்க முயல்கின்றனர்.

மேலும், அப்படி நடந்தால் கட்சியை எப்படி நடத்துவது என்பது குறித்து தேசிய செயற்குழுவைக் கூட்டி விவாதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: