முஃப்தியின் பேச்சைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி

  • ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீதின் பேச்சைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மக்களவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

    ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீதின் பேச்சைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மக்களவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத்  தேர்தல் சுமுகமாக நடந்ததற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என்று அந்த மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள முஃப்தி முகமது சயீது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற முஃப்தி முகமது சயீது, மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சுமுகமாக நடந்ததற்கு, பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளான ஹுரியத் அமைப்பினருமே காரணம் எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை பிரதமர் நரேந்திர மோடியிடமும் தான் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். சயீதின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும், இந்த விவகாரம் திங்கள்கிழமை எதிரொலித்தது. மக்களவையில், காஷ்மீர் முதல்வர் சயீதின் கருத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருடன் பேசியதாக சயீது தெரிவித்துள்ளார். இது மிகவும் முக்கிய விவகாரம் ஆகும். சயீது செய்தியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் நிர்மல் சிங் உடனிருந்தார். ஆனால், சயீதின் கருத்து குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 6 கிராம பஞ்சாயத்து தலைவர்களை பயங்கரவாதிகள் கொலை செய்தனர். ராணுவச் சாவடிகள் மீது தற்கொலைப்படை தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதை, சுமுகமான சூழல் எனத் தெரிவிக்க முடியாது.

தேர்தல் சுமுகமாக நடந்ததன் பெருமை, மாநில மக்கள், பாதுகாப்புப் படையினர், தேர்தல் ஆணையத்தையே சேரும். இந்த விவகாரத்தில், பிரதமர் மௌனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது. சயீதின் கருத்தை மக்களவை கண்டிக்க வேண்டும். அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. அவையின் மையப்பகுதிக்கு வந்து நின்று கோஷமிட்டபடி இருந்தனர்.

பின்னர், சயீதின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவை: இதே விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சாந்தாராம் நாயக் பேசியதாவது:

முதல்வராகப் பதவியேற்ற உடனேயே, தேச விரோதக் கருத்தை சயீது தெரிவித்துள்ளார். இது அவரது பதவிப் பிரமாணத்துக்கு எதிரானது. தேச விரோத சக்திகளுடன் அவர் கூட்டு வைத்திருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.

சயீதின் அமைச்சரவை சகாக்களில் ஒருவரது சகோதரர், பிரிவினை அமைப்பான ஹுரியத்தில் உள்ளார். அவரது மனைவி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தேர்தல் சுமுகமாக நடந்ததற்கு, தேர்தல் ஆணையமும், பாதுகாப்புப் படையினருமே காரணம். ஆனால், அதுகுறித்து சயீது எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

நான் கூறியது சரியானதே: முஃப்தி முகமது சயீது

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து தான் தெரிவித்த கருத்து சரியானதே என்று அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜம்முவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான், ஹுரியத் குறித்து நான் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்ன கருத்து தெரிவித்தேனோ, அதில் நான் உறுதியாக இருக்கிறேன். காஷ்மீரில் வளர்ச்சிக்கும், ஜனநாயகத்துக்கும் பணியாற்ற வேண்டியுள்ளது. இதை அவர்கள் (பாகிஸ்தான், ஹுரியத்) அங்கீகரித்துள்ளனர். வாக்குச்சீட்டுகளால்தான் மக்களின் விதியை தீர்மானிக்க முடியும், துப்பாக்கித் தோட்டாக்களாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த வாக்குச் சீட்டுகளை, இந்திய அரசமைப்புச் சட்டம்தான் நமக்கு அளித்தது. அதன் மீது ஜம்மு-காஷ்மீர் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகையால் தேர்தலில் பாகிஸ்தான், ஹுரியத்) தலையிடவில்லை. எதிர்க்கட்சியினர், சிறிய விவகாரத்தை பெரிதாக்க முயலுகின்றனர் என்றார்.

-http://www.dinamani.com

TAGS: