20 தமிழர்கள் படுகொலை திட்டமிட்ட சதிச் செயல்! அம்பலப் படுத்திய பலியானோரின் கைப்பேசி அழைப்புகள்

andhra-police20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் கைப்பேசி அழைப்பு விவரங்கள் அம்பலப் படுத்தியுள்ளது.

திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 தமிழர்களை கடந்த மாதம் 7ம் திகதியன்று, ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டு கொன்றனர்.

ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் முன்னரே கைது செய்யப்பட்டு கொடூர சித்ரவதைகளுக்குக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படுகொலை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்று, படுகொலையானோரின் கைப்பேசி அழைப்புகளை ஆராய்ந்துள்ளது.

அதன் மூலம், ஆந்திரா பொலிஸார் தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள் என அம்பலமாகியுள்ளது.

செம்மரங்களை ஏப்ரல் 5ம் திகதி முதலே தமிழர்கள் வெட்டியதாக ஆந்திரா காவல்துறை ஒரு சிசிடிவி சாட்சியத்தை வெளியிட்டிருந்தது.

ஆனால் படுகொலை செய்யப்பட்டோரில் வேட்டகிரிபாளையம் பெருமாள், கலசமுத்திரம் பழனி, காந்திநகர் மகேந்திரன், படவீடு முனுசாமி ஆகியோரது கைப்பேசி அழைப்புகள் மூலம் அனைவருமே ஏப்ரல் 6ம் திகதி தான் தமிழகத்தில் இருந்து புறப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைவருமே 6ம் திகதி இரவில் தான் பொலிசாரால் ஆந்திரா- தமிழக எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்பும் பின்னரும் இந்த மூவரது செல்போன்களுக்கும் தற்போது சாட்சியமாக இருக்கும் மூவரது செல்போன்களில் இருந்து அழைப்புகள் சென்றுள்ளது.

இதேபோல் வேறு சிலரது கைப்பேசிகளுக்கும் எழுதப்படிக்கத் தெரியாத இவர்களது கைப்பேசிகளில் இருந்து ஆந்திரா பொலிசாரே எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியுள்ளனர்.

அதாவது இந்த மூன்று பேர் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த தமிழர்களையும் ஆந்திராவுக்குள் வரவழைத்து சுட்டுக் கொல்லவே ஆந்திரா பொலிஸ் திட்டமிட்டிருந்ததும் ஆனால் மூவரும் பொலிசில் சிக்கிக் கொண்டதை உணர்ந்தவர்கள் தமிழகத்துக்கே திரும்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர், ஏப்ரல் 7ம் திகதி அதிகாலையில் மூவரது கைப்பேசிகளும் ஆந்திராவின் சந்திரிகிரி வனப்பகுதியில் இருந்ததாக காட்டுகிறது, ஆனால் சந்திரகிரி வனப்பகுதியில் செம்மரங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஏப்ரல் 6ம் திகதி தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்றவர்களை வழிமறித்து கைது செய்து சுட்டு கொன்று செய்து செம்மரமே இல்லாத காட்டில் ஆந்திரா காவல்துறை வீசியது அம்பலமாகியுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: