நாம் தமிழர் கட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்: சீமான் பேட்டி

seemanசென்னை, மே 23–

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மாலை மலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கே:– “நாம் தமிழர் கட்சி ஏன் உருவானது? அதற்கான அடிப்படை நோக்கம் என்ன?”

ப:– “நாங்கள் தொடங்கிய கட்சி அல்ல இது. தொடர்கிற கட்சி. தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனார் தான் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கினார்.

வாழும் தமிழர்களுக்கென தனி தேசம் இல்லையே என்கிற ஆதங்கத்திலும் அதனை நிறைவேற்றும் நோக்கத்திலும் ‘நாம் தமிழர்’ கட்சியைத் தொடங்கினார். அவர் தி.மு.க.வில் இணைந்த போது, ‘வழி வழியாக வருகிற வீரத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் கட்சியைத் தொடர்வார்கள்’ எனச் சொன்னார். அய்யாவின் பாதை சரியாக இருந்தது. அவருடைய நோக்கம் சரியாக இருந்தது. அதனால் பாதியில் நின்ற அந்தப் பயணத்தை வீரத்தமிழ்ப் பிள்ளைகள் நாங்கள் தொடர்கின்றோம். கட்சியின் நிறுவனத் தலைவர் அய்யா சி.பா.ஆதித்தனார்தான்.

கூறுபட்டுக் கிடக்கும் தமிழர்களை இன உணர்வோடு திரட்டி பச்சைத் தமிழனுக்கான அதிகாரத்தைப் பெற்றே தீரவேண்டிய காலக்கட்டாயமே நாம் தமிழர் கட்சியைத் தொடர வைத்தது. மாற்று அரசியலுக்கான எளிய மக்களின் புரட்சியே எங்களின் திரட்சி!”

கே:– “இயக்குநர் சீமானை அரசியலுக்கு இழுத்து வந்தது எது?”

ப:– புதைக்க நாதியற்ற பிணமும் துடைக்க நாதியற்ற கண்ணீரும்தான். சிறு வயதிலேயே ராமேஸ்வரத்துக்கு ஈழத்தில் இருந்து ரத்த சொந்தங்கள் அகதிகளாக மூட்டை முடிச்சுகளோடு வருவதைப் பக்கத்து ஊர்க்காரனாகப் பார்த்திருக்கிறேன். ஏன் இந்த அவலம் எனத் துடித்திருக்கிறேன். தமிழன் சிங்கள வல்லூறுகளின் நெருக்கடிக்கு ஆளாகிக் கிடக்கும் அவலம் புரிந்தது. கிடைக்கிற மேடைகளில் எதையும் உடைக்கிற குரலோடு பேசிய பேச்சுகள் ஈழத்தின் கவனத்துக்குப் போனது. 2004ல் ஈழத்துக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. அப்போது ‘தம்பி’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம். போக முடியவில்லை.

2008ல் போர்மேகம் பெரிதாகச் சூழ்ந்த வேளையில் மீண்டும் அங்கிருந்து அழைப்பு. சென்றேன். சிறந்த பெருமக்களாலும் வீரமிகு தம்பிகளாலும் வடிவம் செய்யப்பட்டிருந்த தேசத்தைக் கண்ணில் பார்த்த கணம். எல்லாவிதப் புரிதலோடும் பேசிய தலைவர், ‘ஒரு ஐயாயிரம் பேரைத் திரட்டி உன்னால் போராட முடியாதா?’ என்றார். ‘சாகத் துணிந்தவர்களுக்குத்தான் இனத்தின் தலைமையை ஏற்கிற தகுதி’ என தலைவர் கொடுத்த தைரியத்தோடு திரும்பினேன்.

போர் தீவிரம் எடுத்து, இரண்டு மாதத்திலேயே மொத்த கனவும் நொறுங்கிய நேரம். ‘மேதகு பிரபாகரன் என் சொந்த அண்ணன்’ எனச் சொன்னதற்காக புதுவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஈழத்தில் நான் நின்ற இடமெல்லாம் சிங்கள வெறி வென்ற இடமானது. என்னை அழைத்துச் சென்ற, வரவேற்ற, வாழ்த்திய, அறிவுரைத்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டதாக சேதி வரவர, தன்மை மறந்த வெறிநிலையில் தத்தளித்துச் செத்திருந்தேன். ‘பாதையைத் தேடாதே, உருவாக்கு’ என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அழுகையும் துயரமும்தான் என்னை அரசியலுக்கு இழுத்து வந்தது!”

கே:– ‘’நாம் தமிழராய்த் திரள நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து இதனைச் செய்வது சாத்தியமா?”

ப:– தமிழகத்தில் உள்ளவர்ளுக்கு அ.தி.மு.க., தி.மு.க. என்கிற கட்சிகளைத் தெரிந்த அளவுக்குக்கூட திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது. நோக்கத்தைவிட்டு விலகிப்போனவர்கள் திராவிடம் என்கிற வார்த்தையை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மதவாதத்துக்கு எதிரானது திராவிடம். ஆனால், திராவிடக்கட்சிகள் எந்த அடிப்படையில் மதவாத பா.ஜனதாவோடு கூட்டணி வைத்தன? ஆரியத்துக்கு எதிரானது திராவிடம்.

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட போது இந்தத் திராவிடம் என்ன செய்தது? இனம் காக்க, மொழி காக்க தமிழ்த்தேசிய அரசியலே இப்போதைய அவசியம். தமிழர் என்கிற உணர்வு இல்லாது தமிழினம் எப்போதுமே வெல்லாது. திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறி மாறி ஆண்டு எத்தகைய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கின்றன. தமிழக மக்களை இலவசங்களுக்குப் பின்னால் அலைய விட்டத்தைத் தவிர இந்தத் திராவிடக் கட்சிகள் செய்த புரட்சி என்ன?

கே:– “உங்களுடைய பேச்சில் நீங்கள் தி.மு.க.வை மட்டுமே திட்டுகிறீர்கள். அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் பெரும்பாலும் பேசுவதே இல்லையே?”

ப:– என்னுடைய எல்லா பேச்சையும் கேட்டிருந்தால் இப்படியொரு கேள்வியையே கேட்டிருக்க மாட்டீர்கள். அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுக்குமான மாற்று நாங்கள்தான் எனச் சொல்லும்போதே புரியவில்லையா நாங்கள் அ.தி.மு.க.வையும் எதிர்க்கிறோம் என்று. கொள்கையில் இரண்டு கட்சிகளுக்குமே பெரிய வித்தியாசம் இல்லை. இந்தக் கட்சிகளை வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் இலக்கு.

கே:– திருச்சி மாநாட்டின் நோக்கம் என்ன?”

ப:– தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி அச்சாரத்துக்காகப் போடப்படும் வழக்கமான மாநாடு அல்ல இது. இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் கூடி நமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கிற முடிவு. நம் இனத்தின் எழுச்சிக்கான அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழாவே திருச்சி மாநாடு.

இதுகாலம் வரை சாதிக்காக, மதத்துக்காக, இந்திய தேசிய அரசியலுக்காக, திராவிட அரசியலுக்காகத் திரண்ட தமிழன், முதன் முறையாகத் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் திரள வேண்டிய இன எழுச்சி அரசியல் மாநாடு இது. தமிழ்த் தேசிய எழுச்சியை உலகுக்கு உரைக்கும் நாளாக தமிழர் மறுமலர்ச்சித் திருவிழாவாக இந்த மாநாடு அமையும். ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் என்பதுபோல் 2015 மே 24 ஐ தமிழர் இன எழுச்சி அரசியல் நாளாக நிச்சயம் இருக்கும்.

கே:– தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருக்கின்றீர்கள். இது எந்த விதத்தில் சாத்தியமாகும்?”

ப:– சாத்தியத்தில் இருந்து எதுவும் பிறப்பதில்லை. தேவையிலிருந்துதான் பிறக்கிறது. ‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பார்கள். நல்ல மாற்றத்துக்கான தேவை தமிழகத்துக்கு இப்போது அவசியம். தனித்துப் போட்டி என்பது என் விருப்பம் அல்ல. என் நிலத்தின் விருப்பம். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதையும் செய்துவிடவில்லை. தனித்துப் போட்டியிட்டால் பரப்புரை தொடங்கி தேர்தல் முடிவு வரை எத்தகைய இக்கட்டுகளுக்கெல்லாம் நாம் ஆளாகுவோம் என்பது எனக்கும் தெரியும்.

நாலைந்து சீட்டுக்காக கூட்டு வைக்கிற குறுகிய கொள்கை கொண்டவர்கள் நாங்கள் அல்ல. பத்து வாக்கு வாங்கினாலும் ஒரு தமிழனுக்குத் தமிழ்ப் பிள்ளைகள் அளித்த வாக்கு அது. ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எங்களுக்குத் தேவை அரசியல் மாற்றம். தொடக்கத்திலேயே வெற்றியைக் கண்டுவிட வேண்டும் எனத் துடிப்பவர்கள் அல்ல நாங்கள். தனித்து நின்று தோற்கத்தயார், ஆனால் தரம் கெட்ட ஆட்சிகளை ஏற்கத் தயார் இல்லை. ஒரு வண்டி குப்பையை எரிக்க ஒரு வண்டி தீக்குச்சிகள் தேவை இல்லை. ஒரு தீக்குச்சி போதும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.maalaimalar.com

TAGS: