கெட்கோ மக்களின் நில உரிமைப் போராட்டம்

Gatco1970 காலக்கட்டத்தில், நாட்டில் பல திசைகளிலிருந்து சுமார் 400 பேர் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தால் (NUPW) ஜெம்போல் நகரிலுள்ள, கம்போங் செராம்பாங் இன்டா என்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கரும்பு பயிரிடுவதற்காகவே இவர்கள் இங்கு அழைக்கப்பட்டனர். தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சேய் நிறுவனமான கெட்கோ (GATCO – The Great Alonioners Trading Corp, Bhd) இந்த திட்டத்தை எடுத்து நடத்த நியமிக்கப்பட்டது.

இந்தத் திட்டட்த்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயிரிடுவதற்கு 10 ஏக்கர் நிலமும், வீடு கட்டுவதற்கு 1 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. இந்த நிலத்திற்கு ஒவ்வொருவரும் RM7600 தொகையை செலுத்தியுள்ளனர். குடியேறிய ஒரு சில வருடங்களிலேயே, சீனி ஆலை நொடித்துப் போனாதால், கரும்பு பயிரீடு திட்டம் தோல்வியைத் தழுவியது. இதனால் கெட்கோ நிறுவனமும் பண முடக்கத்திற்கு ஆளானது.

அச்சமயத்தில், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் வங்கியில் 15 இலட்சம் கடன் பெற்று, 1983-ல் கரும்பு பயிரீட்டை கைவிட்டு, ரப்பர் மரத்தை மறுநடவு செய்தனர். இந்தத் திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட  10 ஏக்கர் நிலம் 8 ஏக்கராக, 26 ஏப்ரல் 1983-ல் புது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1985 இல், கெட்கோ நிறுவனத்தின் முறைகேடான நிர்வாகத்தால் இந்த ரப்பர் மர திட்டமும் தோல்வியை அடைந்தது. பலருக்கு கடனாளியாக ஆகியது கெட்கோ. கடன் கொடுத்த வங்கியோ, கடனுக்காக நிலத்தை பறிமுதல் செய்து ஏலத்திற்கு விட்டது.

டிசம்பர் 2003 இல், கெட்கோ நிலம் 16 மில்லியனுக்கு ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த நிலத்தை நில பியீரீடு செய்தவர்களே மீட்பதற்காக, 18 ஆகஸ்ட் 2004 இல்,  2% அதாவது RM320 000 வெள்ளியை வங்கி நியமித்திருந்த ஏலமிடும் நிறுவனமான சிங்கம் & யோங்-கிடம் கொடுத்தது.

ஆனால், சிங்கம் & யோங் நிறுவனமோ நிலத்தை தாமரை ஹோல்டிங்ஸ் சென்.டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திடம் விற்றது. கெட்கோ மக்களிடம் பணத்தையும் பெற்று, அதே நேரத்தில் பொதுவில் நிலம் ஏலமிடப்படாமல் தனிப்பட்ட சில பேச்சுவார்களின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு நிலம் தாமரை ஹோல்டிங்ஸ்-க்கு மாற்றப்பட்ட மோசடி நடந்தது.

இந்த நில மோசடியை எதிர்த்து, கெட்கோ மக்கள் வழக்கு தொடுத்தனர். உயர் நீதிமன்றத்தில் தோல்வி கண்ட மக்கள், மேல் முறையீடு நீதிமன்றத்தில் கடந்த 25-2-2014 இல் வெற்றி கண்டனர், அதாவது நிலம் விற்கப்பட்டதில் சில தில்லுமுல்லுகள் நடந்துள்ளது, மேலும் கெட்கோ மக்களே நிலத்தின் உரிமையாளர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, தாமரை ஹோல்டிங்ஸ் மனு செய்துள்ளது. அதன் வழக்கு 18 ஆகஸ்ட் 2015-ல் நீதிமன்றத்திற்கு வரவிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கமும் நிலத்தின் ஒரு பகுதிக்கு உரிமை கொண்டாடுகிறது. அரசாங்க நிலம் என்றுgatco1 பெயர் பலகையும் நிறுவி, நிலத்திலுள்ள ரப்பர் மரங்களையும் வெட்டி சாய்த்து வருகிறது. தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவத்தினத்திடமிருந்து ஒருபகுதி நிலத்தை வாங்கியதாக கூறும் மாநில அரசாங்கம், அதற்காக எவ்வித ஆதரத்தையும் காட்ட மறுக்கிறது.

நிலத்தின் விற்பனை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில்,  கெட்கோ மக்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்திருக்கும் பட்சத்தில், நிலத்தில் அத்துமீறி நுழைந்து மரங்களை தகர்த்தும் நடவடிக்கைகளை கெட்கோ மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் போது, போலீஸ் மற்றும் ரேலா தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களை கைது செய்வதும், தடுத்து வைப்பதும் மற்றும் ஜாமீனில் விடுதலை செய்வதுமாக சம்பவங்கள் தொடர்கிறது.

தாமரை ஹோல்டிங்ஸ், மாநில அரசாங்கம், மாவட்ட அலுவலகம், போலீஸ், ரேலா, குண்டர் கும்பல்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து கெட்கோ மக்களை துன்புறுத்தி வருகின்றனர். சட்டப்படி கெட்கோ மக்களே நில உரிமையாளர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அடுத்த வழக்கு நிலுவையில் உள்ள போதும், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்கிறது. இதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் தொடர்கிறது!