குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

hydhrabadஐதராபாத்: குற்றச் செயல்களை தடுப்பதற்கும், போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை கண்காணிப்பதற்காகவும், அவர்கள் உடலில் கண்காணிப்பு கேமராவை தொங்கவிடும் நடைமுறை, ஐதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் சாலைகளில் நெரிசல் அதிகரித்து காணப்படும் நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் சாலை விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார், லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவிப்பதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களை கண்காணிக்கவும், குற்றங்களை தடுக்கவும், லஞ்சம் வாங்கும் போலீசாரை கண்டறிவதற்காகவும், லஞ்சம் குற்றங்களை தடுக்கவும், ஐதராபாத் காவல்துறை, போக்குவரத்து போலீசார் கழுத்தில் கேமராவை தொங்கவிடும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இதன்படி போக்குவரத்து போலீசாரின் கழுத்தில் தொங்கவிடப்படும் அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் ஜி.பி.ஆர்.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம், போலீசாரை மட்டுமல்லாது குற்றச்செயல்களில் ஈடுபடுவோரையும் கண்காணிக்க முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விரைவில் ஐதராபாத்தில் காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம், லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு, இந்த கேமராக்கள் கடிவாளமாக அமையும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

-http://www.dinamalar.com

TAGS: