மாணவர்களை “மங்குனி”களாக மாற்றும் ஸ்மார்ட் போன்கள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

mobileஹூஸ்டன்: ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கற்கும் திறன் குறைபாடு ஏற்படுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ஸ்மார்ட் போன் என்றால் ஸ்டைல், நாகரீகம், அப்டேட்டட் பெர்சன் என்ற நிலையெல்லாம் மாறி அதனால் நாம் மக்கு மங்குனிகளாக மாறி விடுகிறோம் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டனில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

2010- 2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 24 கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களிடம் ஸ்மார்ட் போன்களைக் கொடுத்து ஆய்வில் ஈடுபடுத்தினர்.

அம்மாணவர்களுக்கு புதிதாக ஸ்மார்ட்போன்கள் வாங்கித் தரப்பட்டது. இதுரை அவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாதவர்கள் ஆவர். அதனை எவ்வாறுப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் கற்றுத் தரவில்லை.

பின்னர், அம்மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றிற்கு அம்மாணவர்கள் அளித்த பதில்கள் சேகரிக்கப் பட்டன.

பின்னர், ஓராண்டு முழுவதும் அம்மாணவர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆராயப்பட்டது. ஒராண்டிற்குப் பின்னர் மீண்டும் அம்மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் குறித்து முன்னர் கேட்கப் பட்ட கேள்விகள் திருப்பிக் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம் ஸ்மார்ட்போன்களால் மாணவர்களின் கல்வியில் முடக்கம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததாக, இந்த ஆய்வின் இணையாசிரியராக செயல்பட்ட பிலிப் கோர்டம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்மார்ட்போன்கள் தொடர்பான முந்தைய ஆய்வுகளில் அவை மாணவர்களின் கல்விக்கு அதிகம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். சில குறைபாடுகளைத் தவிர ஸ்மார்ட்போன்கள் நன்மைகளையே செய்வதாக அந்த ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

ஆனால், அந்த ஆய்வு முடிவுகளில் இருந்து தற்போதைய ஆய்வு முடிவு மாறுபட்டிருப்பதாக பிலிப் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு மூலம் ஸ்மார்ட்போன்களால் மாணவர்களின் கல்வியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

-http://tamil.oneindia.com
TAGS: