ஐ.நா. சார்பில் விண்ணில் செலுத்தப்படவுள்ள சர்வதேச செயற்கைக் கோளுக்கு மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களை தவிர்ப்பது தொடர்பாக ஆலோசிக்க ‘கேனியஸ்’ (CANada-EUrope-US-ASia) என்ற கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு இயங்கி வருகிறது.
கனடாவில் உள்ள மொன்றியல் நகரை மையமாக வைத்து இந்த அமைப்பு இயங்கிவருகிறது.
வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலநடுக்கம், காட்டுத்தீ, பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் செயற்கைக் கோள் ஒன்றை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
“disaster risk reduction – GlobalSat for DRR” என அந்த செயற்கைக் கோளுக்கு பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ‘கலாம் குளோபல்சாட்’ “UN Kalam GlobalSat” என பெயரிட தீர்மானித்துள்ளதாக ‘கேனியஸ்’ அமைப்பின் தலைவரான மிலின்ட் பிம்ப்ரிக்கர் தெரிவித்துள்ளார்.
‘கேனியஸ்’ அமைப்பின் தலைவர் கூறுகையில், செப்டம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் 150 நாடுகளின் ஒப்புதலுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
“உலக விண்வெளி இயக்கம்-2050” என்ற தனது நூலில் அப்துல் கலாம், இயற்கை பேரிடர்கள், குடிநீர் பஞ்சம், சுகாதாரம் சார்ந்த கல்வி மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை போன்றவற்றைப் பற்றி குறிப்பிட்டிருந்ததால் அவர் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
மேலும், அவரது பெயரை சூட்டுவது வருங்கால ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும் என தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com


























வரவேற்கின்றோம்.
அருமையான முடிவு . இந்தியா இதுபோல் இந்த மாமேதைக்கு ஏதாவது கெளரவம் கொடுக்குமா?
உயர்ந்தவர்களின் பெயர் வானுயர மிளிர்வதுதானே சிறப்பு.