ஓசோன் படலம்: மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய்ப் பாருங்க.. பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி!

meenakshi-amman-templeடெல்லி: ஓசோன் படலம் குறித்து முதன்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனை தெரிந்து கொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள பூகோள சக்கரத்தை பாருங்கள் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கண்டிப்பு காட்டியுள்ளனர்.

ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சி. மேத்தா, எளிதாக கடத்தப்பட்டு வரும் ஹைட்ரோப்ளோரோகார்பன் வாயுக்களால் ஒசோன் படலத்தில் ஓட்டை விழுவதோடு, பூமியின் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது என குற்றம்சாட்டினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஹைட்ரோப்ளோரோகார்பன் வாயுக்களால் மட்டுமல்ல மற்றும் பல காரணிகளாலும் ஒசோன் படலம் சேதமடைகிறது ‘ஓசோன் படலம் சேதமடைவது, சர்வதேச பிரச்சினை’ என்று கூறியது. இம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் அதிகாரிகளின் விளக்கத்தை கடுமையாக சாடினர்.

“ஓசோன் படலம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் முதல்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கான ஆதாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள, 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள சக்கரத்தில் உள்ளது. அந்த சக்கரத்தில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓசோன் படலம் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது. இதனை அறிந்துகொள்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள் என்று பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் கூறினர்.

பூமிக்கு மேலே 15 கி.மீ. முதல் 30 கி.மீ. உயரத்தில், இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியன் உமிழும், உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பூமியை பாதுகாக்கிறது. ஆனால், காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால், ஓசோன் படலம் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைந்து மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்புரை நோய் போன்ற நோய்களை உருவாக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: