எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்!

narayanan_adiஇந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து காலணியால் தாக்கப்பட்டதாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

சென்னையிலிருந்து வெளியாகும் “தெ ஹிந்து” நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, “அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்” என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.

இதில் இந்தியாவின் முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன் பேசினார்.

இந்நிலையில் அவர் பேசிவிட்டு  மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், நாராயணன் அருகே சென்று திடீரெனெ செருப்பால் அடித்ததாக, அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்கிய நபர்    “எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்” என்று கூறியபடியே அடித்தார்.

இதில் இரண்டு – மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்ததாக கூறப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார்.

இதனிடையே எதிர் பாராத விதமாக திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, நாராயணனை அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.

தாக்குதல் நடத்திய நபர்

இத் தாக்குதலை நடத்திய நபர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த  பிரபாகரன் என பின்னர் தெரிய வந்தது.

தான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன் தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரபாகரன் கைது

இதனிடையே அங்கு விரைந்த பொலிஸார்  பிரபாகரனைக் கைது செய்தனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை என்றார்.

மேலும் இவர்கள்  விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்.

இதேவேளை  இந்தக் கூட்டத்திற்கு எதிராக மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் முற்றுகை!

தமிழகத்திலிருந்து வெளியாகும் தி ஹிந்து பத்திரிகையினையும் என்.ராமையும் கண்டித்து, ஹிந்து பத்திரிகை அலுவலகத்தினை முற்றுகையிட்டு மே பதினெழு இயக்கம் போராட்டம் நடத்தியுள்ளது.

இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் உள்ளிட்ட தோழர்கள், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோரும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது.

‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால், அசைவ உணவினை அனுமதிப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறது.

மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்குள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல் மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிகையாளர்களை பதவி நீக்கம் செய்வது வரை தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது.

இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.

இந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும் , அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீதான தி ஹிந்து நிர்வாகத்தின் சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழர் விடியல் கட்சி தோழர்களால் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: