கடன் தொல்லையால் பரிதாபம்.. மனைவி, மகள், செல்லப் பிராணிகளுடன் தற்கொலை செய்து கொண்ட விவசாயி !

farmerநீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் விவசாயி வெற்றிவேல் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூரை அடுத்த செறுமுள்ளி கிராமம், முக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெற்றிவேல். இவரது மகள் பாரதி. 11ம் வகுப்பு படிக்கும் பாரதியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்த தோழி நித்யா, வீட்டின் கதவில் நூலால் கட்டி தொங்க விடப்பட்டிருந்த காகிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், உள்ளே அனைவரும் இறந்து விட்டனர். போலீசை அழைக்கவும். யாரும் உயிருடன் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

இதனை கண்ட நித்யா, உடனே தனது பெற்றோரிடம் கூறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் போலீசார், வீட்டினுள் சென்று பார்த்தபோது குடும்பத்துடன் அனைவரும் இறந்து கிடந்தனர். மனைவி, மகளுடன், இரண்டு நாய்களையும் வெள்ளைத் துணியால் தனித்தனியாக சுற்றி, சந்தனம் மற்றும் குங்குமத்துடன் இறுதி சடங்கு செய்துவிட்டு வெற்றிவேல் தூக்கில் தொங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 19 லட்சம் ரூபாய் கடனுடன் வாழ பிடிக்கவில்லை என்று அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: