தமிழக கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை

srirangam_001தமிழக கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பில், பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் 2016 சனவரி 1ம் திகதி முதல் ஆண்கள் வழக்கமான மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, பேன்ட்டும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார், சேலை, தாவணியும், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடையும் அணிந்து வரவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கோயில்களில் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி ஹரிதா, சுகந்தி என்ற இரண்டு பெண்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையில், ஆடைக் கட்டுப்பாடு தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது போல் உள்ளதாக மனுதாரர் தரப்பினர் வாதங்களை முன்வைத்துள்ளனர்.

இதையடுத்து வாதாடிய அரசு தரப்பினர், கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடுக்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டுள்ளனர்.

ஆனால் நீதிமன்றம் அரசின் வாதங்களை ஏற்கவில்லை. இதையடுத்து தனது தீர்ப்பில், ஆடைக்கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், இது தொடர்பாக பதில் அளிக்கும் படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: