உடுமலை ஆணவக் கொலை போல் மற்றொரு கொலையா? கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

madras_highcourt_001உடுமலை ஆணவக் கொலை போல் மற்றொரு கொலை சம்பவம் நிகழக்கூடாது என கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சிறப்பு துணை தாசில்தார் சன்னாசிதுரை, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், பொறியியல் பட்டதாரியான எனது மகன் கிஷோர் குமாரும், எங்கள் ஊரை சேர்ந்த அழகர்சாமியின் மகள் சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தனது மகளை கடத்தி திருமணம் செய்து வைத்ததாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அழகர்சாமி புகார் அளித்தார்.

அதன்பேரில் என் மீதும், எனது மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வந்த சங்கீதா, தனது சுய விருப்பத்தின்படியே கிஷோர்குமாரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் தனக்கும், தனது கணவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திண்டுக்கல் பொலிஸ் டி.எஸ்.பி.யிடம் மனு கொடுத்தார்.

அதில் தங்களை கவுரவக்கொலை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அவர்கள் இருவரையும் ஒப்படைக்குமாறு சங்கீதாவின் குடும்பத்தினர் என்னை மிரட்டி வருகின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள என்னை அடிக்கடி விசாரணைக்கு வருமாறு பொலிசார் தொந்தரவு செய்கிறார்கள்.

உடுமலைப்பேட்டையில் சமீபத்தில் நடந்த கவுரவக் கொலை போல கிஷோர் குமார், சங்கீதா இருவரையும் கொலை செய்ய சங்கீதாவின் பெற்றோர் திட்ட மிட்டுள்ளனர்.

எனவே விசாரணைக்கு அழைத்து தொந்தரவு செய்யக்கூடாது என்றும், கிஷோர்குமார்– சங்கீதாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ் உடுமலைப்பேட்டையில் நடந்தது போன்ற ஒரு சம்பவம் இனிமேல் எங்கும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு மனுதாரருக்கும் அவர் குறிப்பிட்ட கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கும் உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: