போதையில் காரை ஓட்டி கொன்ற பிரபல வீரருக்கு ஜாமீன்! உயிரின் விலை 15 லட்சமாம்

சென்னை கதீட்ரல் சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் திகதி அதிகாலை வேளையில், போதையில் சொகுசுக் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் திருத்தணியை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஓட்டுநர் பரிதாபமாக பலியானார். 12 பேர் காயமடைந்ததுடன், 12 ஆட்டோகளும் சேதமடைந்தது.

இந்த விபத்தை ஏற்படுத்தியதாக தேசிய கார்பந்தய வீரரான விகாஸ் மற்றும் அவரது நண்பர் சரண் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாதபடி 5 வெவ்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எனினும் காரை தன்னுடைய டிரைவர் தான் ஓட்டினார் என்றும், காரின் எஞ்சின் கோளாறே விபத்துக்கு காரணம் எனவும் விகாஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதனை ஏற்காத முதன்மை அமர்வு நீதிமன்றம் இருவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரின் சார்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன், விகாஸ் மொத்தமாக 27.5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

உயிரிழந்த ஆறுமுகத்தின் மகளுக்கு 15 லட்ச ரூபாயும், மற்றவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

-http://news.lankasri.com

TAGS: