இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் .. சொல்வது சாமி

jalliசென்னை : பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து மாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துவருகிற்து. இந்நிலையில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டத்தில் எந்த வித தடையும் இல்லை என்று அவர் கூறினார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் தொடர்பாக ஒரு அறிவிக்கையை வெளியிட்டனர் என்றும் அந்த பட்டியலில் மாடுகளை சேர்த்துவிட்டதால் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டு உள்ளது என்றும் சுப்பிரமணிய சாமி அவர் கூறினார். இந்த பட்டியலில் இருந்து மாடுகளை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளதாகவும் சுப்பிரமணிய சாமி கூறினார்.

அதன்படி மாடுகளை நீக்கி புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஜல்லிக்கட்டில் மாடுகளை கொடுமைப்படுத்தவில்லை, எந்த மாடும் சாகவில்லை என நீதிமன்றத்தில் தான் வாதம் செய்துள்ளதாக கூறிய சுப்பிரமணிய சாமி, ஜல்லிக்கட்டு எப்படி நடக்கிறது? என்பதை பார்க்க நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கலாம் என்றும் தான் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 14-ந் தேதிக்கு முன் தீர்ப்பு வந்துவிடும் என்று கூறிய சுப்பிரமணி சாமி, அந்த தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: