விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம்: வேல்முருகன்

Velmurugan_tvkசென்னை : தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த புத்தாண்டிலாவது விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம் என புத்தாண்டு வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்தாண்டிலாவது பொருளாதார நெருக்கடி நீங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ‘தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வறட்சியையும் இயற்கை பேரிடரையும் ஒருசேர தந்த 2016-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறுகிறது; தமிழகம் இதுவரை கண்டிராத பெரும் வறட்சியை எதிர்கொண்டிருக்கும் சூழல் உதயமாகிறது புத்தாண்டு.

நாடு இதுவரை எதிர்நோக்காத பொருளாதார நெருக்கடியை 2016-ம் ஆண்டு நமக்கு தந்தது. வரும் புதிய ஆண்டிலாவது இத்தகைய நெருக்கடி நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிட வேண்டும்.தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் மாண்டுபோகும் பெரும் துயரம் 2016-ம் ஆண்டின் இறுதிநாட்களில் அடுத்தடுத்து நடந்தேறுகிறது.

இத்துயரம் தோய்ந்த சூழலில் பிறக்கும் புதிய ஆண்டிலாவது தமிழகத்து நதிநீர் உரிமைகள் காப்பாற்றப்பட்டு விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம்.தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த சிங்கள அரசு அவற்றை அரசு உடைமையாக்கிவிட்டதாக அறிவிப்பு வந்துள்ள நிலையில்தான் புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம்.

பிறக்கும் புதிய ஆண்டில் நமது தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை பகுதிகளில் சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தலுமின்றி கடலுக்கு சென்று திரும்பிடும் இயல்பு நிலை உருவாகிட வேண்டும். புதிய 2017-ம் ஆண்டில் தமிழகத்தின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க நாம் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதியேற்போம். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்! இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: