மதுரையில் சாதி ஆணவக்கொலை: சினிமா பாணியில் பெண்ணை எரித்துக்கொன்ற பெற்றோர்

love2மதுரை: சாதி மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணை பெற்றோரே தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனர். அரண்மனை 2 படத்தில் நடந்தது போல அரங்கேறியுள்ளது இந்த சாதி ஆணவக்கொலை.

ஆணவக்கொலைகளை தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டாலும் அவை தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன் கோவிலுக்கு அழைத்து சென்ற பெண்ணையே எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பதை பதைக்க வைத்துள்ளது.

நர்ஸ் சுகன்யா

ஆணவக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுகன்யா.மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வீராளம்பட்டியைச் சேர்ந்தவர் பெரிய கார்த்திகேயன் என்பவரின் மகளாவார். ஈரோடு அருகே மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்தார் சுகன்யா.

பெற்றோர் எதிர்ப்பு

ஈரோட்டைச் சேர்ந்த பூபதியிடம் மனதை பறிகொடுத்தார் சுகன்யா. இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்து, இரு வீட்டு பெற்றோர்களிடமும் தங்களின் காதலை தெரியப்படுத்தினர். வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு நிலவியது.

காதல் திருமணம்

வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யா, பூபதியுடன் ஈரோடு – பெருந்துறையில் கடந்த ஜனவரி மாதத்தில் பதிவுத்திருமணம் செய்து எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். புதிதாக திருமணம் முடித்த, இளம் தம்பதிகள் இருவருக்கும் ஆதரவாகப் பூபதியின் பாட்டி பொன்னம்மாள் அவர்களுடனே இருந்திருக்கிறார்.

அழைத்து சென்ற பெற்றோர்

பெற்றோர் நினைவு வரவே, போனில் பேசியுள்ளார். இதுதான் சரியான நேரம் என்று கருதிய சுகன்யாவின் பெற்றோர் கோவிலில் சாமி கும்பிட வேண்டும் என்று கூறி சுகன்யா அவரது கணவர் பூபதி மற்றும் பாட்டி பொன்னம்மாள் ஆகியோரை அழைத்துகொண்டு காரில் பேரையூர் – வீராளம்பட்டிக்கு கடந்த வாரம் சென்றனர்.

எரித்துக்கொலை

அப்போது சுகன்யாவின் தந்தை பெரிய கார்த்திகேயன் பூபதியையும் அவரது பாட்டி பொன்னாம்மாளையும் பாதி வழியிலேயே அடித்து விரட்டியுள்ளார். பின்னர், தன் மகள் சுகன்யாவிடம் பூபதியை மறந்து விடுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சுகன்யா மறுப்புத் தெரிவிக்கவே, அவரது பெற்றோரே அப்பெண்ணை எரித்து கொலை செய்து விட்டனர்.

போலீசில் புகார்

தன் மனைவிக்கு நடந்த இந்த அநீதி குறித்து, பூபதி பேரையூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுகன்யாவை எரித்துக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுகன்யாவின் தந்தை பெரிய கார்த்திகேயன், தாய் செல்லம்மாள், அத்தை லட்சுமி, அண்ணன் பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

-http://tamil.oneindia.com

TAGS: