மான, ரோஷம் இருந்தால் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுங்கள்.. பாரதிராஜா ஆவேசம்!

சென்னை: மத்திய மாநில அரசுகளே மானம் ரோஷம் இருந்தால் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுங்கள் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கொலை செய்தாரா? கொள்ளையடித்தாரா என்றும் பாரதிராஜா விளாசி தள்ளினார்.

இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார் அவரை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இதற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன், பாலாஜிசக்திவேல், ராம், வெற்றிமாறன், கமலக்கண்ணன் உள்ளிட்ட 8 இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பாரதிராஜா மத்திய மாநில அரசுகளை கடுமையாக
சாடினார்.

குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருமுருகன் காந்தி எந்த வன்முறையில் ஈடுபட்டார்? கொலை செய்தாரா? கொள்ளையடித்தாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பினார்.

மத்திய அரசை விமர்சனம் செய்தால் நடவடிக்கை எடுப்பீர்களா என்றும் அவர் சாடினார். எளிமையான நினைவேந்தல் நிகழ்வைத் தடுப்பது கொஞ்சமும் நியாயமற்றது என்றும் பாரதிராஜா தெரிவித்தார்.

வீரமும் விவேகமும் தமிழ் மண்ணில் துருப்பிடித்து போய்விட்டது என்றும் அவர் சாடினார். தமிழர்களின் சிந்தனைகள் துருப்பிடித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

பிரபாகரனை நான் கூட சந்தித்தேன், என்னை கைது செய்யுங்கள் என்றும் அவர் காட்டமாக கூறினார். யார் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் சாடினார்.

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழக வரலாறு தெரியாதவர்கள், சும்மாயிருப்போரை அரசியலுக்கு வருமாறு கெஞ்சுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.

கலைஞர்கள் மடியில் கனமில்லை அதனால் பயமில்லை என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் என பெருந்தன்மையுடன் இருப்பதாகவும் பாரதி ராஜா கூறினார்.

தமிழகத்தில் உள்ள இரு அணிகளும் தலையாட்டி பொம்மையாக இருப்பதாக கூறிய பாரதிராஜா, மானம் ரோஷம் இருந்தால் மத்திய மாநில அரசுகள் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றார். இல்லையெனில் மானம் ரோஷம் உள்ள தமிழர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

-cinemapettai.in