கமலை பற்றி பேச எச்.ராஜவுக்கு என்ன தகுதி இருக்கு? நடிகர் மயில்சாமி ஆவேசம்

mayilsamyபுதுக்கோட்டை: கமல்ஹாசனை பற்றி பேச பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜவுக்கு என்ன தகுதி இருக்கு என நடிகர் மயில்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இவர்களின் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியுள்ளது. இதில் நடிகர் மயில்சாமி இன்று கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அரசு நடப்பது போல தெரியவில்லை. எப்போது எந்த கூட்டத்துக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக செல்வேன். ஆனால் நெடுவாசலுக்கு தான் வருத்தத்துடன் வந்திருக்கிறேன். 100 நாட்கள் மக்களை போராட செய்தது அரசுகளின் குற்றம் தான் எனக் குற்றம்சாட்டினார்.

அப்போது எச்.ராஜா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மயில்சாமி, எச்.ராஜா யாருங்க. அவரை யாருக்கு தெரியும். முதல்ல அவரை ஒரு தேர்தல்ல நின்னு ஜெயிச்சுட்டு வரச் சொல்லுங்க. அப்பறம் நடிகர் கமலை பற்றி பேசட்டும். எச்.ராஜா தேர்தல்ல நிற்கட்டும் அந்த தொகுதியில் கமலை நிறுத்துகிறேன் ஜெயிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய மயில்சாமி, கமலை பற்றி பேச எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு எனக் கூறினார்.

tamil.oneindia.com